சென்னையில் 2 திருடர்களை துரத்தி துணிச்சலாக அவர்களை பிடித்து பணத்தை மீட்ட கல்லூரி மாணவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (19). இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அந்த தெருவில் ஒரு பெண் தன் குழந்தையை வைத்து கொண்டு அழுது கொண்டு நின்றுள்ளார். அவரின் 1 லட்சம் ரூபாய் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்து கொண்டு ஓடினர் என தெரியவந்துள்ளது.
அவர்களை தன்னுடைய பைக்கில் துரத்த ஆரம்பித்த கார்த்தி போக்குவரத்து நெரிசலால் பைக்கை போட்டு விட்டு ஓடி துரத்தியுள்ளார். சுமார் 30 மீ தூரம் ஓடிய திருடர்கள் கார்த்தி வருவதை கண்டு அவரை தாக்க முயன்றுள்ளனர். அதில் ஒருவர் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றுள்ளார். அதனை சாமர்த்தியமாக தடுத்த கார்த்தி அவர்களை தாக்கினார்.
சுற்றி இருந்த பொதுமக்கள் திருடர்களை பிடித்து பையை வாங்கி பெண்ணிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு திருடர்களையும் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வந்த திருட்டு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இதில் துணிச்சலாக செயல்பட்ட கார்த்திக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது. கல்லூரி மாணவனான கார்த்தி மாலை வேளையில் சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தும் தன் பெற்றோருக்கு உதவி அந்த பணத்தில் படித்து வருகிறார். மேலும் மூன்று ஆண்டுகளாக பாக்ஸிங் கற்று வந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “திருடர்கள் ஆயுதம் வச்சிருப்பாங்கன்னு தெரியும் இருந்தாலும் அந்த பெண்ணோட அழுகதான் கண் முன்னாடி இருந்துச்சு. வருங்காலத்தில் நல்லா படித்து காவல்துறை அதிகாரி ஆவது தான் லட்சியம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கார்த்தியின் தாயார் கூறுகையில், “உயிரை பணையம் வச்சி குற்றவாளிகளை பிடிச்சு அவங்ககிட்ட இருந்து பணத்தை மீட்டுக் கொடுத்த என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்துச்சு, ஆனா எனக்கு இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்று கூறி பெருமிதம் அடைந்தார்