சிவகங்கையில் தயாரிக்கப்படும் பஞ்ச கவ்ய விளக்குகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சிவகங்கையில் பஞ்சகவ்யமான பசுஞ்சாணம், நெய், பால், தயிர், ஹோமியம் போன்ற ஐந்து பொருட்களையும் சரியளவில் கலந்து பஞ்சகவ்ய விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.
இதற்கான பசுஞ்சாணம், மற்றும் பொருட்கள் கிராமப்புறங்களில் உள்ள மாடுகளிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. இதனை விளக்காக செய்து சுத்தமான நல்லெண்ணெய், நெய் ஊற்றி விளக்குகளை எரியவிடலாம்.
வீட்டில் பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றும் போது ஹோமம் நடத்துவதற்கான பலனை பெற முடியும். பசும்பாலில் சந்திரன், தயிரில் வாயு பகவான், ஹோமியத்தில் வருணபகவான், சாணத்தில் அக்னிபகவான், நெய்யில் சூரிய பகவான் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
இந்த ஐந்தும் கலந்து வீட்டில் விளக்கு ஏற்றும் போது காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். நேர்மறை ஆற்றல் பெருகும், சுவாசக்கோளாறு மட்டுப்படும். இந்த விளக்கை வெற்றிலையிலோ அல்லது சிறு தட்டுகளில் எரிக்கப்படும் போது விளக்கு எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். அதனை திருநீறாக பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்கும் நாகதீபா தெரிவித்ததாவது: பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவையான அனைத்தும் கிராமப்புறங்களில் சேகரித்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. அதில் விளக்கு செய்து வழங்குகிறோம்.
இந்த விளக்கு வீடுகளில் உள்ள துர் சக்திகளை அகற்றுவதாக மக்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவு பயன்படுத்துகின்றனர். தினசரி 2 ஆயிரம் விளக்குகள் வரை தயாரிக்கிறோம்.
இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் பாக்கெட்டில் அடைத்து அனுப்பி வருகின்றனர். இது தவிர திருநீறு, குங்குமம், வேப்பிலைப்பொடி, நவமூலிகைப்பொடி போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.