சென்னை:
காவிரி தீர்ப்பு விவகாரத்தில் அரசு மறுபரிசீலனை மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று டிவிட்டரில் பதிவிட்டாலும் பதிவிட்டார், ரஜினிக்கு முகம்காட்டாத அனாமதேய நபர்கள், டிவிட்டரில் மோசமான நடையில் பதில் கொடுத்து வருகின்றனர். இவர்களில் பலர், கமலின் பெயருடன் அரசியல் செய்வதுதான் விநோதம்.
சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப் படும் பொருளாக உச்ச நீதிமன்றத்தின் காவிரி விவகாரம் குறித்த நேற்றைய தீர்ப்பு அமைந்தது. அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்புக்கு பலரும் தங்கள் எதிர்வினைகளை ஆற்றினர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ரஜினிகாந்த், காலை முதல் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், தனது மன்ற நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவாக, எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ரஜினியே மாலை 6.20க்கு தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டார்.
அது வழக்கம் போல், அரசியல்வாதிகள் சொல்லும் கருத்தாகவே வெளித் தெரிந்தது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் கருத்து கூற, பலரும் டிவிட்டர் பக்கத்தில் பொங்கித் தீர்த்து விட்டார்கள்.
அவர் பதிவிட்ட கருத்து…
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Rajinikanth (@superstarrajini) February 16, 2018
இதற்கு எதிர்வினையாக, மறு பரிசீலனையா மறு சீராய்வா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மறு பரிசீலனை என்ற ஒன்று சட்டத்திலேயே இலலாத ஒன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திருத்துவதற்கு பெயர் மறு சீராய்வு. இதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமா அறிக்கை விடுறதுக்கு பதில் அமைதியா இருப்பதே மேல்.. என்று ஒருவர் கருத்திட்டார்.
15 வருஷசத்திற்கு மேல்முறையீடு செய்யமுயாது என தெரிந்த ரஜினி வாய் திறந்துள்ளார், இது மக்களின் மீதான அக்கறையில்? இல்ல தீர்ப்பை மறுபரிசீலனை செய்யமுடியாது என தெரிந்தும் இப்படி பேசுவதன் நோக்கம்? மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறாரா? – என்று ஒருவர் கேட்க, இதற்கான பதில்களும் களை கட்டின.
உங்களுக்கு எழுதித் தருபவரையாவது அறிவுள்ளவராக வைத்துக் கொள்க. தீர்ப்பையே படிக்கத் தெரியவில்லை என்று எதிர்வினைகளும் இருந்தன.
ஆனால், சிலர் மோசமான மொழியை பயன்படுத்தி, கமல் பேன்ஸ் என்ற பெயரில் கருத்திட, டிவிட்டர் போர்க்களம் சூடுபிடித்தது.
இந்தக் களேபரங்களுக்கு இடையே, கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைதி கொண்டாரே தவிர, பின்விளைவுகளை அறிந்ததாலோ என்னவோ, டிவிட்டர் பக்கம் வரவேயில்லை. ஒதுங்கிக் கொண்டார்.