முன்னாள் மத்திய அமைச்சரும், அண்மையில் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவருமான மணிசங்கர் ஐயர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இவர், கடந்த 11ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, பாகிஸ்தானைப் புகழ்ந்தும், இந்தியாவை விமர்சித்தும் பேசியதாகக் கூறப் படுகிறது.
மணிசங்கர் ஐயர் இவ்வாறு பேசியதைக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி முன் அந்த மாவட்ட பாஜக.,வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் அசோக் சவுத்ரி தேசதுரோகம் மற்றும் அவதூறு வழக்கு தொடுத்தார்.
அவர் அளித்த மனுவில், “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புவது பாராட்டத்தக்கது. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை’ என்று பாகிஸ்தான் மீதான அன்பை வெளிப்படையாகக் காட்டியுள்ளார் மணிசங்கர் ஐயர். இந்தியாவை இழிவுபடுத்திப் பேசிய அவரது கருத்து, தேசதுரோகப் பிரிவைச் சேர்ந்தது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 20ஆம் தேதி விசாரிக்கவுள்ளது,