புது தில்லி: பாகிஸ்தானுக்கு இதுவரை பேச்சுவார்த்தைக்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது,. இனி உலக நாடுகளுடன் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இது செயலில் இறங்குவதற்கான நேரம் என ஆவேசத்துடன் கூறினார் பிரதமர் மோடி!
அர்ஜெண்டினா அதிபர் மௌரிசியோ மேக்ரி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அவர்களுக்கு இடையேயான சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதன் பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 75 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதனை அர்ஜென்டினா அதிபர் அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பயங்கரவாதம் மிகப் பெரும் அசு்சுறுத்தலாக உள்ளதை நானும் அதிபர் மேக்ரியும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலின் மூலம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது. இனி பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இது செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம்.
ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக இப்போது ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்குவது, பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு சமம் என்று பேசினார்.
இது குறித்து டிவிட்டர் பதிவுகளில் பல கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று..
பிஎம் சார்… அடுத்த நாடுகளின் உதவியைக் கேட்பதை எப்போது இந்தியா நிறுத்தப் போகிறது? ஒசாமா பின் லேடனைக் கொல்லப் போகும் போது அமெரிக்கா இப்படித்தான் அடுத்த நாடுகளின் உதவியைக் கேட்டதா? ஒவ்வொரு முறை எதிரிகளைக் கொல்லப் போகும் போதும் இஸ்ரேல் இப்படித்தான் அடுத்த நாடுகளிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறதா? உங்களுக்கு நாட்டின் 125 கோடி மக்களின் ஆதரவு இருக்கும் போது ஏன் அடுத்தவர்களின் உதவிகளைக் கோரிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுபியுள்ளார் ஒருவர்.
PM Sir, when will India stop looking at other countries for help? Does the USA asked us before killing Osama Bin Laden or does the Israel asked us everytime before killing its enemies?
YOU HAVE SUPPORT OF 125 CR PEOPLE YET YOU NEED OTHERS SUPPORT?— Nawabzadey (@RockingMulga) February 18, 2019