சென்னை: அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 51 இடங்களில் மே 1 ஆம் தேதி, மே தினப் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓய்வும் மகிழ்வும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு உண்டு என உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற மே முதல் நாள் ஆண்டுதோறும் மே தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உழைப்பின் பெருமையை பறைசாற்றுவதோடு நின்று விடாமல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக அதிமுக அமைப்பு ரீதியாக செயல் பட்டு வரும் தமிழகத்தின் 50 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மே 1-ம் தேதி மே தினப் பேரணி நடைபெறும். அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் வட சென்னையிலும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லிலும், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திலும், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை திருச்சி புறநகரிலும் நடைபெறும் மே தினப் பேரணிகளில் பங்கேற்பர்.

