BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Published:

thirukkural in russia presented to putin by modiji - 2026

பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழர் நிர்வாகப் பொக்கிஷமான திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை அன்புப் பரிசாக வழங்கினார்.

தில்லியில் பிரிக்ஸ் மாநாடு செப்.,12 நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 3 நாள் பயணமாக இன்று தில்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடியை அதிபர் புடின் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்கு உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில் அமைந்த, தமிழரின் ஞானக் களஞ்சியமான திருக்குறளின் ரஷ்ய மொழி பெயர்ப்பு நூலை பரிசளித்தார். பிரதமர் மோடி பரிசளித்த இந்தத் திருக்குறள் புத்தகம், நைரா மக்ர்ட்சியன் என்பவரால் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், பெரும்புலவர் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தை, மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லும் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புடினுக்கு பரிசளித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதனை வரவேற்றுப் பாராட்டிய மத்திய இணை அமைச்சர் எல்.,முருகன் தன் அறிக்கையில், “உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி    அவர்களின் முயற்சிக்கு மேலும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக, ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புதின் அவர்களுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பிரதமர் அவர்கள் அன்புடன் பரிசளித்திருப்பது தமிழர்களுக்கு பெருமிதம் அளிக்கும் தருணமாகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழரின் உயரிய பண்பாட்டு சிந்தனையைப் போலவே, திருக்குறளின் அறம், பொருள், இன்பம் குறித்த வாழ்வியல் நெறிகள் உலக மக்கள் அனைவரையும் சென்றடையட்டும். தமிழின் தொன்மையையும், திருக்குறளின் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளையும் உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img