இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டி20 போட்டி, ஹைதராபாத், 25.09.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணியை (20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 186 ரன், கிரீன் 52, டிம் டேவிட் 54, டேனியல் சாம்ஸ் 28, இங்க்லிஸ் 24, அக்சர் படேல் 3/33) இந்திய அணி (19.5 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 187 ரன், விராட் கோலி 63, சூரியகுமார் யாதவ் 69, பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 25, டேனியல் சாம்ஸ் 2/33) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலிய அணியை மட்டையாடச் சொன்னார். முதல் ஆறு பவர்ப்ளே ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் எடுத்தது. கிரீன் 19 பந்துகளில் 50 ரன் அடித்தார். அதன் பின்னர் அக்சர் படேல், சாஹல், ஹார்திக பாணிட்யா போன்றோர் நன்றாகப் பந்து வீசி ரன்ரேட்டைக் குறைத்தனர்.
புவனேஷ்குமார் முதல் இரண்டு ஓவர்களை நன்றாகப் போட்டாலும் மூன்றாவது ஓவரில் 21 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் ஏழு ரன் கொடுத்து ஒரு விக்கட்டை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 186 ரன் எடுத்திருந்தது. இந்திய அணி ஆடவந்தபோது முதல் ஓவரிலேயே ராகுல் ஆட்டமிழந்தார்.
நாலாவது ஓவரில் ரோஹித் ஷர்மா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்பிற்கு 50 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் சூர்யகுமார் யாதவும் கோலியும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.
14ஆவது ஓவரில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 36 பந்துகளில் 69 ரன் அடித்திருந்தார். பின்னர் ஹார்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கோலி அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டுவந்தார். ஆனால் இறுதி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் இருக்கும்போது ஆட்டமிழந்தார்.
ஆனால் பாண்ட்யா கவனம் சிதறாமல் ஆடி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறுவிக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதோடு தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. அக்சர் படேல் தொடர் நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.