கன்னியாகுமரிக்கு என்று ஒரு செண்டிமெண்ட் இதுவரை இருந்து வந்தது. அது இந்தத் தேர்தலில் தகர்ந்துள்ளது. இந்த செண்டிமெண்ட்டை வைத்தே, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று பாஜக.,வினர் நம்பி வந்தனர். ஆனால், அது இன்று பலிக்கவில்லை!
கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சிதான் மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதுதான் அந்த செண்டிமெண்ட். அதே போல், கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சி, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று ஒரு சென்டிமென்ட் இருந்தது. அது, 2011 வரை இருந்தது. 2016-ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக., வென்றது. ஆனால், அப்போது அதிமுக., ஆட்சி அமைத்தது. அப்போது அந்த செண்டிமெண்ட் தகர்ந்தது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி முன்னர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. அப்போதும் இதே செண்டிமெண்ட் வேலைசெய்தது. இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சி அல்லது கூட்டணி மத்தியிலும் ஆட்சி அமைக்கும்.
கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் சி.பி.எம் வேட்பாளர் பெல்லார்மின் வெற்றிபெற்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றிபெற்றார். அந்தக் கட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே அமைத்தது.
அது போல், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக., பெரும் வெற்றி பெறும் என்று கூறப் பட்டது. அதே போல், இந்தத் தேர்தலில், தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது.
ஆனால் கன்னியாகுமரி செண்டிமெண்ட் தகர்ந்து விட்டது. இங்கே பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.