அண்ணன் சீமானுடன் சூப்பர் ஹீரோ அந்தஸ்துடன் சேர்ந்த எஸ்டிஆர் சிம்பு இப்படி எல்லாம் ஆசைப்பட ஆரம்பித்துவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவான வந்தால் ராஜாவாதான் வருவேன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு சிம்பு தனது ரசிகர்களுக்கு பாலபிஷேகம் பிளெக்ஸ் போன்றவை வைக்கவேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தங்கள் தாய் தந்தையருக்கு வேட்டியோ அல்லது புடவையோ வாங்கிக் கொடுக்குமாறும் முதலில் அறிவுறுத்தி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இது, இணையதளங்களில் வைரலாகியது.
இந்தச் சுவடு மறைவதற்குள், அடுத்த வீடியோவை வெளியிட்டார் சிம்பு. அதில், தனது படத்திற்கு மிகப் பெரிய பிளெக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும்; பால் பாக்கெட்டில் கொண்டு வந்து அல்ல… அண்டாவில் கொண்டு வந்து பாலபிஷேகம் செய்யவேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மற்ற எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதனால் பாக்கெட்டில் பாலபிஷேகம் செய்தால் வெளியில் தெரியும். சிம்புவுக்கு ரசிகர்களே இல்லை அதனால்தான் சிம்புவாக ஒரு பிலிம் காட்டுகிறார்; அவரே சொன்னால் கூட எவர் வந்து அவருக்கு கட் அவுட் வைக்கப் போகிறார்கள்… அல்லது பாக்கெட்டில் பால் அபிஷேகம் செய்யப் போகிறார்கள் என்று சிம்பு காதுபட விமர்சித்தார்களாம். அதனால் கடுப்பான சிம்பு, தனது இருக்கும் ஓரிரண்டு ரசிகர்களாவது பெரிய பேனர் வைத்து, கட் அவுட் வைத்து, அண்டா அண்டாவா பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரக்தியின் விளிம்பில் தன் ஆசையை வெளிப்படுத்தி அன்புக் கட்டளை இட்டுள்ளார்.
ஆனால், இதனை வேறு விதமாகப் பார்க்கிறது சமூக ஊடக உலகம். சிம்பு சீமானுடன் கை கோத்ததில் இருந்து சீமானின் பெரியார் கொள்கை முப்பாட்டன் முருகன் என்றெல்லாம் உளறிக் கொட்டி வருவது போல், நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சுமாக சிம்புவும் இருக்கிறார் என்று வேதனை தெரிவிக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.