பாரத நாட்டில் மனித சமுதாயம் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து வந்துள்ளது. நதிக்கரையில் வாழத் தலைப்பட்ட வேத காலம் தொடங்கி, புராண இதிகாச காலம், அடுத்து வந்த அன்னியப் படையெடுப்புகளின் காலம் வரையிலான பல மாற்றங்களை இந்த சமூகம் சந்தித்து வந்துள்ளது. கால மாற்றங்கள் மனித சமூகத்தில் பண்பட்ட நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், மகளிருக்குக் கொடுத்த மதிப்பில் வேதகாலமே மேம்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நம் நாட்டில் முன்னோர் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை அளித்திருந்தனர். படையெடுப்புகளாலும் கலாசாரத் தாக்குதல்களாலும் பெண்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வேத காலத்தில் பாரதப் பெண்கள் அறிவுஜீவிகளாகத் திகழ்ந்துள்ளனர் என்று பல்வேறு உதாரணங்களைக் கூறலாம். வேத மாதா என்று சரஸ்வதி தேவி வர்ணிக்கப்படுகிறார். மனித வாழ்வின் மிக முக்கியத் தேவைகளான கல்வி, செல்வம், வீரம் என மூன்றும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என தேவியரே நமக்கு அளிப்பதாகக் கருதினர்.
வேதங்களை எழுதாக் கிளவி என்பர். வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்தவை வேதங்கள். அவற்றைத் தொகுத்தவர் வேத வியாசர். அவரும் எதையும் இயற்றினாரில்லை. ஆனால், வேதங்களின் பல மந்திரங்களும், சூக்தங்களும் பெண்களின் பெயர்களிலேயே வழிவழியாய் உச்சரிக்கப்பட்டு வந்துள்ளது.
‘ரிக் வேத’த்தின் பதினேழு சாகைகளை அளித்தவர்கள் என ரோமஸா, லோமுத்ரா, அபத்தா, கத்ரு, விஷ்வவரா, கோஷா, ஜுஹு’, ஷ்ரத்த-காமயனி, ஊர்வசி , ஷாரங்கா , யாமி , இந்திராணி , சாவித்திரி, தேவயானி – என பெண்களின் ஆதிக்கம். அடுத்து, கான வேதம் எனப் போற்றப் படும் சாம வேதத்தின் நான்கு சாகைகளை (கிளைகளை) இயற்றியவர்கள் பூர்வார்ச்சிகா எனும் நோதா, அக்ரிஷ்டபாஷா, உத்தரார்ச்சிகா எனும் ஷிகடனிவவரி, கண்பயனா ஆகியோர் குறிப்பிடப் படுகின்றனர்.
வேத காலத்தில் இந்தப் பெண்கள், ஆண்களுக்கு இணையான அறிவாற்றலும், வேத வேதாங்கங்களில் ஞானமும் கொண்டவர்கள். அவ்வாறு இருந்ததால்தான் வேத சாகைகளை அளித்திருக்கின்றனர். எனவே அவர்கள் மாணவர்களைப் போலவே, குருகுலத்தில் முறையாகப் பயின்றிருக்கின்றனர் எனலாம்.
யாக்ஞவல்கியர் எனும் ரிஷி, ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில், ‘கல்வி பயின்ற பெண் ஒருத்தியை அவளுக்கு இணையாகவோ, அதற்கும் மேலாகவோ அறிவாற்றல் கொண்ட ஆணுக்கே மணம் முடிக்க வேண்டும்’ என்கிறார். அத்தகைய அறிவாற்றல் கொண்ட பெண்ணைக் குழந்தையாகப் பெற, இல்லற வாழ்வில் உள்ள ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நியதிகளையும், சடங்குகளையும் கூட இந்த உபநிஷதம் உரைக்கிறது. பிற்காலத்தில் பாணினி, ‘ஆண்களைப் போலவே பெண்களும் வேதங்களைக் கற்றார்கள்’ என்கிறார்.
இல்லறத்தார் ஒருவர் யாகங்களை மேற்கொண்ட போது, அந்த சூத்திரங்களை தெளிவான உச்சரிப்புடன் அவர்களது இல்லத்தரசிகளும் அருகில் நின்றவாறே கூறியிருக்கிறார்கள். வேதத்தின் பூர்வ மீமாம்சை, ஆண்களுக்கு இணையாக ஹிந்து மத சடங்குகளை நடத்தும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்கிறது. ரிஷிகளுடன், ரிஷி பத்னிகள் சிறப்பாகப் போற்றப் படுகின்றனர். குருவைக் காட்டிலும் குருமாதாவுக்கு ஒரு சீடன் பெரும் மதிப்பைத் தந்துள்ளான்.
வேத கால சமுதாயத்தில் சாதாரண இல்லறத்தார், ‘ஒரே மனைவி – ஒரே கணவன்’ என்ற நியதியையே பெரும்பாலும் கடைபிடித்துள்ளனர். இதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான உரிமைகள் சமமாக இருந்துள்ளன. பெண்கள் சிலர் தனிப்பட்ட வகையில் தாங்களாகவே முயன்று கல்வி அறிவைத் தேடி வளர்த்துள்ளனர். ‘பாத்யாஸ்வஸ்தி’ என்ற பெண் வடதிசை சென்று கல்வி கற்று விருது பல பெற்றாராம். ஜனக மன்னர் ஏற்பாட்டில் நடந்த உலகின் முதல் தத்துவ மாநாட்டில், கர்கி எனும் சாத்வி கலந்து கொண்டு, யாக்ஞவல்கியருடன் விவாதம் செய்துள்ளார்.
வேத காலத்தை அடுத்து, இதிகாச கால நாயகிகளான சீதாவும், திரௌபதியும் கூட, கல்வி கற்றவர்களாகவும் சக்தி படைத்தவர்களாகவும், மனத்திண்மை கொண்டவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நம் பாரத மரபுப் படி, இதிகாச காலத்தில்தான் பெண்களின் மதிப்புக்கு குறைவு ஏற்பட்டுள்ளது. ராமாயணத்தில் சீதை ராவணனால் கவரப் பட்டதும், ராவணன் கொல்லப்பட்ட பின்னே சீதை தன் தூய்மையை நிரூபிக்க தீக்குளித்ததும், யாரோ ஒருவர் சொல்லும் வதந்திக்கு செவிமடுத்து, மனைவியை ராமன் காட்டுக்கு அனுப்பியதும் என பெண்மைக்கான மதிப்புக் குறைவு அங்கேயே தலைகாட்டுகிறது.
மகாபாரதத்திலோ, பாஞ்சாலி ஐவருக்கு வாழ்க்கைப் பட வேண்டிய சூழல். மனைவியை ஈடாக வைத்து பகடை ஆடிய மன்னன், சூதில் தோற்றபின், ஒரு பெண்ணை சபைக்கு இழுத்துவந்து ஆடையைப் பிடித்திழுத்து அவமானம் செய்த துச்சாதனன் செயல் என பெண்ணின் மதிப்புக்குக் குறைவு ஏற்பட்டதை பாரதம் காட்டுகிறது.
வேத காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த நிலை இதிகாச காலத்தில் மாறியது. ஆண்களின் பலதார மணம், பெண்களின் மதிப்புக்குக் குறைவை ஏற்படுத்தியது. ஒழுக்கத்திற்கான அளவுகோல் பெண்களைப் பொறுத்தவரை கொடுமையானவை ஆயின. அகலிகை வஞ்சகத்தால் ஏமாற்றப் பட்டு இந்திரனிடம் தன்னை இழந்தாள் என உணர்ந்தும் கூட அவளது கணவர் கௌதமர் அகலிகையை சபித்தார்.
பஞ்ச பத்னிகள் என போற்றப் படும் அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மண்டோதரி ஆகியோரில், ராவணன் மனைவி மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வரும், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒருவருக்கு மேலான ஆடவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. அகலிகை தன் கணவர் கௌதமர் தவிர, வஞ்சகத்தால் இந்திரனுடன் இருந்தாள். திரௌபதிக்கு பஞ்ச பாண்டவர்கள். தாரையோ, வாலி மரித்த பின் சுக்ரீவனுக்கு மனைவி ஆனாள். குந்தி பாண்டுவின் மனைவியாய் இருந்தும், குழந்தைப் பேறுக்கு சூரியன், இந்திரன், வாயு என தேவதைகளை நாடினாள்.
இப்படி, வேதகாலப் பெண்களுக்கு, தங்கள் கணவரைத் தேடிக் கொள்ள உரிமை கிடைத்தது போல், பிற்காலத்தில் வந்த பெண்களுக்குக் கிடைக்கவில்லை. அடுத்து வந்த காலகட்டங்களில், பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது, தங்களுக்கும் இருக்கும் படைப்பாற்றலும், இறை வழிபாடும் பெண்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. சமுதாயத்தால் அடக்குமுறைக்கு ஆளான பெண்கள் பலருக்கு, ஹிந்து மதமும் ஆலயங்களும் வழிபாடுமே அடைக்கலம் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கின்றன.
பிற்காலத்தில் பக்தி இலக்கியங்கள் தலை தூக்கியபோது, ஔவையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மீரா பாய், முக்திபாய், ஜனாபாய் என ஒரு பக்தைகளின் கூட்டமே பெருகியது. அவர்கள் துவக்கத்தில் தங்கள் தனிமையைப் போக்கிக் கொள்ள முயன்று, பின் படைப்பாற்றலால் உலகை வென்றனர். பக்தியால் பலர் உள்ளங்களை வென்றனர்.
—————————————–
2 வது கட்டுரை!
பாரதம் காட்டிய வீர மங்கையர்!