மும்பை:
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் எழுந்துள்ள சில சந்தேகங்களை வைத்து போனி கபூரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்குக் காரணம், போனிகபூர் தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவியையும் அழைத்துக் கொண்டு மும்பையில் இருந்து துபைக்குப் பறந்து சென்று, மீண்டும் மும்பை திரும்பி, ஸ்ரீதேவியிடம் தகவல் தராமல் உடனேயே துபைக்கு பறந்து சென்று, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக ஸ்ரீதேவியிடம் கூறி… என்று சம்பவங்கள் சில சந்தேகங்களை வரவழைத்துள்ளதால், போலீஸார் போனி கபூரிடம் நடந்தவை குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரி மகனும் நடிகருமான மோகித் மார்வா திருமணம், கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றார். மூத்த மகள் ஜான்வி ‘தடக்’ என்ற பட சூட்டிங்கில் இருந்ததால், திருமணத்தில் பங்கேற்கவில்லை. திருமணம் முடிந்த பின், போனி கபூரும் மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணி அளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதை அடுத்து மனைவி ஸ்ரீதேவியை இரவு உணவு உண்ண அழைத்துள்ளார் போனி கபூர். தான் தயாராகி வருவதாகக் கூறிவிட்டு, அவர் குளியலறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார்.
மருத்துவமனையில் ஸ்ரீதேவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் இரவு 9 மணி அளவில் போலீஸுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இந்த வழக்கை துபை போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் வெளிநாட்டு நபர் என்பதால், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு, துபை நீதிமன்ற அரசு வழக்கறிஞரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த விவகாரத்தை விசாரித்த அரசு வழக்கறிஞர் தரப்பு, போனி கபூரிடம் ஏன் துபைக்கும் மும்பைக்கும் அடுத்தடுத்து சென்று வந்தீர்கள் என விசாரித்துள்ளது. மேலும், இந்த விசாரணையில் போனி கபூர் மற்றும் உறவினர்கள் தரப்பு சொல்வதை அப்படியே ஏற்க அரசு வழக்கறிஞர் தரப்பு தயக்கம் காட்டுவதாகவும், அதனால் ஸ்ரீதேவியின் உடலை உடனே மும்பை கொண்டு வருவதில் சிக்கல் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.