சிவபிரதோஷம் –
ஆதிசிவன் இருக்கின்றான்
– கவிஞர் மீ. விசுவநாதன்
ஆதிசிவன் இருக்கின்றான் எங்கும் என்று
அமைதியாக உற்றுப்பார் அனைத்தின் மீதும்
போதியதோர் பக்குவத்தை அவனே தந்து
புதுமையான ஒளியினையே உள்ளே சேர்ப்பான்
சாதிவெறி மதவெறிகள் சண்டை எல்லாம்
தன்னைத்தான் அறிந்திடாத பேர்கள் செய்யும்
நீதியிலாத் தீமையெனத் தெரிந்து கொண்டால்
தீவண்ணன் அன்புமெல்லப் புரியக் கூடும்.
பறவைகளின் பாடிலவன் குரலைக் கேட்போம்
பச்சையான வயல்களவன் படுக்கை என்போம்
கறவைகளின் கூட்டத்தில் கலந்தி ருந்தே
கற்கண்டுப் பாலவனைச் சுவைத்தி ருப்போம்
திறமைக்கு உழைப்பென்னும் சக்தி தெய்வம்
திடமான துணைகொண்ட சிவத்தைப் போற்றி
இறவாத புகழ்கொண்டு நிலைத்து நிற்போம்
எப்போதும் இறைசிந்தைத் துலங்க வாழ்வோம்
(இன்று (21.02.2020) மகாசிவராத்திரி, பிரதோஷம்)