ராஜபாளையம்:
ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு வந்திருந்தார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
அவரிடம் பின்னர் செய்தியாளர்கள் அரசியல் நிலவரங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டனர் அப்போது அவர்,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர் பாஜக.,வுக்கு வந்தால் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
அதிமுக இணைந்தாலும், உடைந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பிற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக., தலையிடாது. அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி திமுக தன்னை மேலும் வளர்க்க நினைக்கிறது. ஆனால், தான் செய்த தவறுகளை அது மறைக்கிறது.
‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பாஜக.,வுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை. அவ்வாறு இருப்பதாக சிலர் கூறுவது மிகவும் தவறானது… என்று கூறினார்.