சென்னை:
போரூர் ரவுண்டனா பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். ரூ. 54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி, மவுண்ட் ரோடு, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பு போரூர் ரவுண்டனா. இங்கே எப்போதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும். சாலை குறுகியது என்பதாலும், நான்கு புறம் இருந்தும் வரும் வாகனங்கள் அணிவகுப்பதாலும் பெரும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இங்கே மேம்பாலம் கட்ட அறிவிக்கப்பட்டது. பின் இந்த மேம்பாலப் பணி, அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தாங்க முடியாத பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி, 2015ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேம்பாலப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட போரூர் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் ஒருவழியாக நிறைவடைந்தன. இருப்பினும், இந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையின் போது போரூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த வாகன ஓட்டிகள் தாங்களாகவே மேம்பாலத்தை திறந்து பயன்படுத்தினர். பின்னர் மீண்டும் போலீசார் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, தடுப்புகள் அமைத்து மேம்பாலப் பாதையை மீண்டும் மூடினர்.
இதனிடையே போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தப் பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.