தனது உடல் நலம் குறித்து வெளியில் வந்த தகவல்கள் தவறானவை என்றும், தாம் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருப்பதாகவும் நடிகை மனோரமா கூறியுள்ளார். அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மனோரமா. இந்நிலையில் மனோரமா உடல்நலம் குறித்து சென்னை, ஐதராபாத் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் வதந்தி பரவியது. இது தொடர்பாக சில தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் செய்தியும் ஒளிபரப்பானது. இது கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் நடிகை மனோரமாவின் நலம் விரும்பிகள். அவரது மகன் பூபதிக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான செய்தி குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது மனோரமா உடல்நலத்துடன் இருப்பதாக அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, இந்த வதந்தி குறித்து விசாரிக்க தெலுங்கு தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பூபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், அம்மா நலமாக உள்ளார் என்று கூறி, ஃபோனை மனோரமாவிடமே கொடுத்தார். அப்போது நிருபரிடம் மனோரமா பேசியது, நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. எனக்கு உடல் நலக்குறைவு எதுவுமில்லை. நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன் எனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு மிக்க நன்றி. நான் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளேன். அதன்படி தெலுங்கு ரசிகர்கள் எனது உடல்நலனில் அக்கறை காட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது. ஆனால் நான் இறந்து விட்டதாக பரவிய வதந்தியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். நடிப்புதான் என் உயிர்மூச்சு. ரசிகர்களின் கைதட்டல் எங்களை வாழவைக்கும் டானிக் போன்றது. அது எனக்கு முழுமையாக கிடைத்தது. எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டினேன் என ரசிகர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. – என்று நடிகை மனோரமா கூறினார்.
நான் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருக்கிறேன்: நடிகை மனோரமா
Popular Categories


