பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த பிறகு தலைமைப் பொறியாளர் ரவீந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார்.
பாம்பன் தூக்குப் பாலத்தின் நிலை இன்றளவும் திருப்தியளிக்கவில்லை என்பதால் அனைத்து ரயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, நேற்று மதியம் 100 வருடங்களைக் கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து – சென்னை செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. அதே போன்று இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில் காலை 8.15 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சென்னையில் இருந்து வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்குப் பின் ரயில் இன்ஞ்சினை வைத்து சோதனை ஓட்டம் நடத்தலாம் என்று யோசித்திருந்தனர். ஆனால், ஆய்வின் போது பாலத்தின் நிலை திருப்தி அளிக்கவில்லை என்றும், இதனால் தூக்குப் பாலம் வழியாக ரயில்களை இயக்குவது தற்போது சாத்தியமில்லை என்றும் ரவீந்திரபாபு கூறியுள்ளார். எனவே மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.