மதிமுக., வெள்ளிவிழாவை அறிவாலய செக்யூரிடியாக கொண்டாடுவாரோ .. அடடே வைகோ..!

dmk security1 - 2026

அண்மைக் காலமாக மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ.,வின் அரசியல் கூத்துகளைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் என பலமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் சமூக அரசியல் பார்வையாளர்கள் போதாது என்று இப்போது நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவாளர்களும் வைகோ.,வை வெறுப்பேற்றுவதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்!

வைகோ என்ற பழுத்த அரசியல் தலைவருக்கு வயது இப்போது 74. அடுத்த வருடம் 75ஆம் அகவையைக் கொண்டாடப் போகிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு வயது 55. தனது 25ஆம் வயதில் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவராக பொறுப்பை வகித்தவர். தொடர்ந்து பல அரசியல் படி நிலைகளைக் கடந்து வந்தவர். பேச்சின் வீச்சில் கட்டுண்டு கிடந்த தொண்டர் படை அவருக்கு!

நெல்லை மண்ணின் வாள் வீச்சு அவரது பேச்சில் வெளிப்பட்டதுண்டு! எல்லாம் குறுகிய காலம்தான்! ஐம்பதுகளை அவர் கடந்த போது, அவருக்கு தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கியது. அதுதான் அந்தப் பேச்சையும் விஞ்சும் கருணாநிதியின் பேச்சு!

மதுரை எனக்கு எல்லை, நெல்லை நமக்குத் தொல்லை என்று எதை வைத்துச் சொன்னாரோ… கருணாநிதியின் மூளையில் அப்போது வைகோ.,தான் நின்றிருப்பார். காரணம், கட்சியில் வெகுவேகமாக முன்னேறி, மிகப் பெரும் தொண்டர் பலத்தையும் படையையும் வைத்துக் கொண்டு, திமுக., என்ற கட்சியை தானே கைப்பற்றி தன் குடும்பத்தை கபளீகரம் செய்து விடுவாரோ என்ற அச்சம் கருணாநிதிக்கு வந்தது. தன் மகன் மு.க.ஸ்டாலின் தனக்குப் பின் கட்சித் தலைவராகி, கட்சியை குடும்ப சொத்தாக மாற்றிவிட படாத பாடு பட்ட ஒருவருக்கு, அதற்கு எதிரியாய் முளைத்து விட்ட ஒருவரை விட்டு வைத்திருக்கத் தோன்றுமா?

விளைவு, வைகோ., தன்னை கொல்லப் பார்க்கிறார் என்று ஒரு கதையை அளந்துவிட்டார். ஸ்டாலினுக்கான வழியை நேர் செய்து கொடுக்க எல்லா வழிகளையும் கையாண்டார். வை.கோபால்சாமிக்கான அனைத்து வழிகளையும் அடைத்து விடுவது என்று முடிவு செய்தார். கட்சியை விட்டு 1992ல் வெளியேற்றினார்.

அப்போது நடந்த சம்பவங்களை இப்போது நாற்பது, ஐம்பது வயதைத் தொட்டிருக்கும் எவரும் மறக்க மாட்டார்கள்! கோபால்சாமிக்காக கோபாலபுரத்தின் முன்னே குவிந்தவர்கள் பலர். தீவிர விசுவாசிகள் தீக்குளித்து மாய்ந்து போனார்கள். பச்சாதாபமும், பரிதாபமும் பலரின் உள்ளத்தைக் கிளரச் செய்தன.

மதிமுக., என்ற கட்சி உதயமானது. பிரமாண்டக் கூட்டமும் போடப் பட்டது. மதிமுக., என்ற கட்சியின் உதயமே, திமுக., என்ற குடும்பச் சொத்தை முழுதாக எதிர்த்துதான்! ஒற்றை ஆலமரத்தின் கீழ் அதன் விழுதுகள் தாங்கி நிற்க, அதன் கீழே எந்த ஒரு சிறு செடியும் முளைக்க விடாமல் செய்துவிட்டார் கருணாநிதி. திமுக., என்ற குடும்பச் சொத்துக்காக, மாடாய் உழைப்பவர்கள் மட்டுமே எட்ட நின்று கூலி பெற்றுக் கொள்ளும் தாழ்ந்த நிலை… இனிப்பை மொய்க்கும் ஈயைப் போல் பலரும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்! அவர்களால் கமிஷன்கள் பெற முடிந்தது. அடியாள் வேலைக்கு கூலி கிடைத்தது. ஆனால், எக்காலத்திலும் கருணாநிதி குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை எதிர்த்தும் கூட கட்சிக்குள் அரசியல் பேச முடியாத சர்வாதிகாரம் வலுவாய் நின்றது.

அப்போது வைகோவுக்காக வெளியே வந்தவர்கள் பொன்,முத்துராமலிங்கம், டிஏகே இலக்குவனன், திருச்சி செல்வராஜ், வேதாரண்யம் மீனாட்சிசுந்தரம், தங்கவேலு, இன்னும்… அவருடனேயே நிழல் போல் இருந்த கேஎஸ் ராதாகிருஷ்ணன்! இத்தனை பேரையும் சந்தேகப் புத்தியில் தூக்கிக் கிடாசினார். இவர்களில் சிலர் அன்றைய பாஜக., உறவில், வாஜ்பாயின் காலத்தில் எம்.பி. ஆனவர்கள்! கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்துக்காரர். சொல்லப் போனால் அதே கோவில்பட்டி! ஏதோ ஒரு வகையில் உறவினர்! ஐ.நா. அவையில் நல்ல பணிக்குச் செல்ல இருந்தவரை தடுத்தார்! உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதி அளவுக்குச் செல்ல வேண்டிய ஒரு வழக்கறிஞரான அவரை அங்கேயே நிறுத்தி வைத்தார். விருதுநகரில் தாம் போட்டியிட்டபோது, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நின்றவருக்கு தண்ணி காட்டி தோற்பதற்கான வேலையைச் செய்தார் வைகோ என்பதுதான் அப்போது உடனிருந்தவர்கள் சொன்ன ரகசியங்கள்!

இப்படி எந்த சந்தேக புத்தியில் கருணாநிதி இதே வைகோபால்சாமியை வெளியேற்றினாரோ, அதே சந்தேக புத்தியில் தன்னுடன் தங்கள் வாழ்வையே துறந்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வந்தார்களோ அவர்களை எல்லாம் சொல்லப் போனால் அழிக்கவே செய்தார்! அந்தப் பாவம் இன்று வைகோ.,வை துரத்துகிறது! நம்பிக்கை துரோகம் என்றுமே ஒருவரை வாழவிடாது!

அன்று திமுக.,வில் இருந்து வைகோ.,வுக்காக வந்தவர்களில் ஈரோடு கணேசமூர்த்தி, திருப்பூர் துரைசாமி… பாவம் வேறுவழியின்றி… இன்றும் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள் வைகோ.,வுடன்! அவர்கள் பெயரும் கூட அடிக்கடி, திமுக.,வில் சேரப் போகிறார்கள்.. சேரப் போகிறார்கள் என்று பெட்டிச் செய்திகளில் இடம்பெற்று விடுகின்றன. ஆனால் தங்களுடன் வந்தவர்கள் மீண்டும் திமுக.,வுக்குச் சென்ற பின்னர் கிடைக்கும் மரியாதையை மனத்தில் கொண்டு அவர்கள் பேசாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள் நெருக்கமானவர்கள்!

இன்று வைகோவுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் 96க்குப் பின்னர் மல்லை சத்யா போன்று… கட்சியில் சேர்ந்தவர்களே! மற்ற தலைவர்கள், இரண்டாம் மட்ட தலைவர்கள் எல்லாம் திமுக.,வுக்கே திரும்பி விட்டார்கள்! அவ்வாறு திரும்பியவர்களும் கூட, வைகோவுடன் சென்ற பாவத்தால், திமுக.,வில் இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கப் பட்டார்கள். கருணாநிதியின் பார்வையில் அவர்கள் வெறுப்புடனேயே அணுகப் பட்டார்கள் என்பதே உண்மை! இன்றளவும் அவர்களுக்கு திமுக.,வில் சரியான பதவிகளோ வாய்ப்புகளோ கிட்டவில்லை!

அன்று… வைகோவால் கருணாநிதிக்குப் பக்கத்து பெஞ்சில் கூட உட்கார முடியாத நிலையில், அடித்துத் துரத்தப் பட்டார். இன்று, அதே குடும்பத்துக்கு சாமரம் வீசிக் கொண்டு, கட்சி எதற்காகத் தொடங்கப் பட்டதோ, அந்த நோக்கத்தை இழந்து, திசை மாறிச் சென்றுவிட்டார். அந்த ஒரே காரணத்தால், மதிமுக.,வுக்கும் திமுக.,வுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்ற எண்ணத்தில், மதிமுக.,வில் இருந்தால் காசு மிஞ்சாது, கையில் இருக்கும் பணத்தையும் கரைக்க வேண்டியிருக்கும், ஆனால் திமுக.,வில் ஒட்டிக் கொண்டிருந்தால் ஏதோ கொஞ்சம் கமிஷன் பார்க்கலாம் என்று தாய்க் கழகம் என திமுக.,வில் ஓடிச் சேர்ந்தான் அடிமட்டத் தொண்டனும், அடுத்தக் கட்டத் தலைவர்களும்! அவர்களைப் போல்… இப்போது மதிமுக.,வின் தலைவனும் முடிவு எடுத்துவிட்டார் என்பதுதான் இன்றைய அசிங்க அரசியல்!

அன்று கொண்டாடப் பட்ட வை.கோபால்சாமி., தன் பெயரை வைகோ., என மாற்றிக் கொண்டுவிட்ட பின்னர், மாபெரும் தள்ளாட்டத்தில் இருக்கிறார் என்பது தான் உண்மை.  கோபாலபுரத்துக் கடவுள் கோபாலன் அருள் அகன்றுவிட்டதுதான் காரணமா? வயது காரணமா, அல்லது கரைந்து போகும் கட்சியைக் காப்பாற்ற ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற பதற்றத்தில் எடுக்கும் முடிவுகளா? என்ன பேசுகிறோம் என்பதைக் கூட உணர முடியாத வயதானதால் வரும் தடுமாற்ற மூளையின் செயல்பாடா? எதுவோ ஒன்று!

இன்று சமூக வலைத்தளங்களின் வரவால், அரசியல் காட்சிகள் மாறிப் போயுள்ளன. அன்றைய கட்சிக் கூட்டங்களும் சந்திப்புகளுமே அரசியல் வாழ்க்கை என்ற நிலை இன்று  இல்லை. வைகோ ராசி என்ற ஒன்று விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தால் இப்போது பரவலாக்கப் பட்டிருக்கிறது சமூக வலைத்தங்களில்! வைகோ.,வுக்கு ஏன் இந்த நிலை!

குறிப்பாக, இந்த வருடம் மதிமுக.,வுக்கும் வைகோவுக்கும் முக்கியமான வருடம். இதற்காக ஒரு முப்பெரும் விழாவே நடந்தது. திராவிட இயக்கத் தலைவர்கள் பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என மதிமுக சார்பாக முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் இந்த வருடம் செப்டம்பரில் (2018) நடைபெற்றது. இந்த விழாவை மருந்துக்குக் கூட திமுக., ஆதரிக்கவில்லை! கருணாநிதி ஆகஸ்ட் எட்டில் மறைந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழித்து நடந்த மதிமுக., மாநாட்டுக்கு ஸ்டாலின் வந்திருக்கலாம், தன் தோழமையைக் காட்டுவதற்கு மேடையில் வாள் கொடுத்து, பூச்செண்டு கொடுத்து, மாலை போட்டு ஏதோ ஒரு விதத்தில் வாழ்த்தியிருக்கலாம்! ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை!

கிட்டக் கிட்டச் சென்றும், எட்டி உதைக்கும் திமுக.,! காரணம், வைகோ., பேசிய பேச்சுகள் அப்படி! விதைத்த கருத்துகள் அப்படி! ஸ்டாலினை கொலைகாரன் என்று குற்றம் சுமத்தி, சாதிக் பாட்சா விவகாரத்தில் பேசிய பேச்சுகள் இன்று பெரும்பாலானவர்களின் செல்போன்களில் சேமிக்கப் பட்டுக் கிடக்கிறது!

கூட்டணியில் இல்லை, வெறும் தோழமைக் கட்சிதான் என்று துரைமுருகன் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன பின்னர், எதற்காக வைகோ அறிவாலயத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டு முட்டுக் கொடுக்கப் போனார் என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள்! திராணி இருந்தால், அதே துரை முருகன் வாயால் நாங்கள் தாய்க் கட்சி, மதிமுக.,எங்கள் குழந்தைக் கட்சி என்று வைகோவால் சொல்ல வைக்க முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறார் என்பதைத்தான் நெடுஞ்சாண்கிடை நிலை வெளிப்படுத்துகிறது!

dmk security - 2026

இப்போது வைகோவின் நிலையை இந்த ஒரு கருத்துப் படமே சொல்லிவிடுகிறது…! இதற்கு 25 ஆண்டுகளைக் கரைத்திருக்க வேண்டாம்! தன்னை நம்பி வந்த தொண்டர்களை தவிக்க விட்டிருக்க வேண்டாம்! ஒரு இயக்கத்தை நடத்துவதாகக் கூறி, பலரை பொருளாதார இழப்புகளில் தள்ளியிருக்க வேண்டாம்! குறிப்பாக., அந்த தீவிர விசுவாசிகளை தீக்கு இரையாக்கியிருக்க வேண்டாம்! அன்றே கருணாநிதியின் கால்களில் விழுந்திருந்தால்… இன்றைய துரைமுருகனின் பொருளாளர் பதவியாவது குறைந்த பட்சம் கிடைத்திருக்கும்! இப்படி அறிவாலய செக்யூரிடி வேலை பார்க்காமல் தன்மானம் இழந்து தவிக்கும் நிலை வந்திருக்காது! இந்த 25 வருடங்களில் குறிப்பாக… கட்சியின் வெள்ளி விழா வருடத்தில், தன்னை துரத்தி விட்ட இல்லத்தின் வாசலில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டு, சமையல் கட்டின் ருசியை வாசம் பிடித்து எச்சில் ஊறும் நிலை வந்திருக்காது!

எல்லாம் கர்ம வினை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories