அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மெகா கூட்டணி அமையும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் திமுக அந்தக் கூட்டணிக்கு தடையாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது… இந்த அரசியல் பணியில் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக உள்ள அதிமுகவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மத்தியில் ஆளும் பாஜக.,வை மாநிலத்தில் வளர்ப்பது அதிமுக.,வின் பணி அல்ல என்று வழக்கம் போல் தம்பிதுரை ஆவேசமாகக் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை சில மாதங்களுக்கு முன் அதிமுகவை ஊழல் கட்சி என்றனர், ரஜினிகாந்த் பின்னால் சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. மீண்டும் அதிமுகவை நெருங்குகின்றனர். பத்திரிகையாளர் குருமூர்த்தி எந்தக் கட்சி என தெரியாது. அவர் சொன்னால் கூட்டணி வராது. தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக அனுமதிக்காது என்று கூறினார்.
அவரது பேச்சுக்களால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் கூட்டணி முடிவிகளை பாஜக எடுக்கக் கூடாது, அதிமுக தான் முடிவுகளை எடுக்கும் என்பதை காட்டவே தம்பிதுரையும் ஜெயக்குமாரும் ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுப்பதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தம்பிதுரை மீது பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அவர் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.
யார் பாஜகவை சுமப்பது அதிமுகவா? மக்கள் உண்மையை அறிவார்கள். திமுகவின் ஸ்லீப்பர் செல் தம்பி துரை … அதிமுக தலைமை தம்பிதுரை அல்ல! எங்கள் தயவில் தான் துணை சபாநாயகராக அவர் உள்ளார். பொய் பேசுகிறார் தம்பிதுரை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்!
அடுத்த சில நாட்களில் மெகா கூட்டணி அமைப்போம் என கூறிய பாஜகவின் முன்முயற்சியை பின்னுக்கு தள்ள அதிமுகவினர் முயன்று வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் மட்டும் விரும்பினால் போதாது, நாங்களும் விரும்ப வேண்டும். தற்போது அது குறித்து பேச தேவையில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.