நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் கோண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். விஷ்ணுபிரியாவின் தாய்– தந்தையருக்கு ஆறுதல் கூறினார். விஷ்ணுபிரியா உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஒரு நேர்மையான அதிகாரி. என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வருகிறது. குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஏன் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் இடமாற்றமாவது செய்து இருக்கலாம்.
காவல்துறை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வசம் உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு இறந்ததற்கு அனுதாபம் கூட அவர் தெரிவிக்காதது ஏன்? விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து தற்போது விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையில் உள்ள ஒரு பிரிவு என்பதால் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை அவர்கள் பாதுகாக்கத்தான் செய்வார்கள். எனவே தான் இந்த வழக்குக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம்.
அதேபோல் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. அப்படி இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என அவர் கூறினார்