சென்னை தாம்பரம் அருகே திருமண வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக.,வினைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
சென்னை பள்ளிக்கரணையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வலது புறம் திரும்ப முயன்ற போது பேனர் திடீரென சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது, பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ.
பேனருக்கு சென்னை மாநகராட்சி, அண்மையில் தடை விதித்திருந்தது. அதை கடுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும், சாலை நடுவில் செண்டர் மீடியனில் போடப் பட்டிருக்கும் ஒயர்கள், மின் கம்பிகள், கேபிள், இணைய இணைப்பு வயர்கள் ஆங்காங்கே தொங்கியபடி இருப்பதால், செண்டர் மீடியனை ஒட்டிச் செல்லும் போது திடீரென வாகனத்தில் ஏதாவது ஒரு பகுதியில் பட்டு இழுத்து, சாலையில் நிலை தடுமாறி விழ வைத்துவிடுகிறது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இதனிடையே, சாலைவிபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீ(23) மரணத்துக்கு டிவிட்டர் பதிவில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது…
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.