ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக தற்போது திகார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரத்திற்கு, அனைவருக்கும் வழங்கப் படுவது போன்ற ஒரே மாதிரியான உணவு தான் வழங்கப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களும் மற்ற சிறைக் கைதிகளுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் கிடைக்கும் என்றது. அதில் பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளது.
சிறையில் உள்ள தனது கட்சிக்காரர், தனது வீட்டில் சமைத்த உணவை அனுமதிக்க வேண்டும் என்று சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார் கைட், “அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கிடைக்கும்” என்றார்.
நீதிமன்றத்தின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சிபல், “அவருக்கு 74 வயது” என்றார்.
சிபல் கூற்றுக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளித்தார், “சௌதாலா (ஐ.என்.எல்.டி தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலா) கூட வயதானவர், அரசியல் கைதி. ஒரு மாநிலமாக, நாங்கள் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ” என்றார்.
விசாரணையின் போது, ப.சிதம்பரத்தின் வழக்குரைஞர் கபில் சிபல் தனது கட்சிக்காரருக்கு எதிரான குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே இருப்பதாக வாதிட்டார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 420 இன் குற்றச்சாட்டுகள் தனக்கு எந்தப் பங்கும் இல்லாததால் அதைக்கூட செய்ய முடியாது என்று வாதிட்டார்.
கபில் சிபலின் கூற்றுக்களை மறுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாங்கள் குற்றப் பத்திரிகைக்கு முந்தைய கட்டத்தில் இருக்கிறோம். மனுதாரர் ஆகஸ்ட் 21 அன்று கைது செய்யப்பட்டார், 2007இல் குற்றங்கள் செய்யப்பட்டன. சிதம்பரம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்” என்றார்.
தாமதம் குறித்து விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 5ம் தேதி சிதம்பரத்தை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியபோது ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கபில்சிபலிடம் கேட்டார். அதற்கு அவர், இடையில் விடுமுறைகள் இருந்ததாக சிபல் கூறினார்.
“அதே நாளில் நீங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகும்போது, நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்?” என்று நீதிபதி மேலும் கூறினார்.
வாதங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியதாகவும், அடுத்த விசாரணை செப்டம்பர் 23 அன்று திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவில், அவரது வயதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 9 வெவ்வேறு உடல் நோய்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வியாதிகளில் டிஸ்லிபிடெமியா, கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், கிளைசீமியா, புரோஸ்டடோமேகலி, கிரோன் நோய், இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு இருக்கும் விட்டமின் டி குறைபாடு ஆகியவை அடங்கும்.
அவரது இரண்டு மனுக்களில் ஒன்று ஜாமீன் கோரியும், மற்றொன்று நீதித்துறை ரிமாண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப் பட்டிருந்தது. இதனை நீதிபதி சுரேஷ் கைட் நாளை விசாரிப்பார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றம் அவரை 14 நாள் நீதித்துறை காவலுக்கு அனுப்பியதை அடுத்து, காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே, அவரது வழக்கறிஞர்கள் தில்லி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர், அதில் அவர்கள் சிதம்பரத்திற்கு சில வசதிகள் கோரியிருந்தனர். சிதம்பரம் தரையில் உட்கார முடியாது என்பதால் ‘வி.வி.ஐ.பி’ வசதி கோரினர். அந்தக் கோரிக்கைகளின் நீண்ட பட்டியலில் ஒரு மேற்கத்திய பாணி கழிப்பறையும் இருந்தது.
பி சிதம்பரத்தை திகார் சிறைக்குச் செல்வதிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில், அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை வைத்திருந்தார். அதில், சிதம்பரம் அமலாக்க இயக்குநரகத்தில் விசாரணைக்கு சரணடைய விரும்புகிறார் என்று கோரினார்.
ஆயினும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 2019 செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
முன்னதாக, தில்லி உயர்நீதிமன்றத்தால் அவரது முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 24 மணி நேரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒரு நீண்ட நாடகத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ.,யால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.