முத்தமிழ் அரசி!

Published:

saraswathi ramanathan - 2026

முத்தமிழ் அரசி – சரஸ்வதி இராமநாதன்

-ஜெயஸ்ரீ எம். சாரி

என் பள்ளி நாட்களில் மயிலாடுதுறையில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்கும் பாக்கியமானது எனக்கு இருந்தது. கம்பராமாயணத்தை அவருடைய சொல்நடையில் கேட்கும் போது தேனாகவே இன்றும் இனிக்கும்.

அவர் தன்னுடைய அருமையான சொல்லாற்றலால் கம்பராமாயணத்தில் கோசலை நாட்டு வளத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது கம்பராமாயணப் பாடல் மூலமாக எருமை மாடு பால் சுரந்ததை அழகாக வர்ணித்தார்.

“சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை”- இது தான் அந்தப் பாடல்.

அன்னப்பறவையானது பண்ணையில் உள்ள தாமரை மலராகிய படுக்கையில் தன் குஞ்சை உறங்க வைத்தது. நீரிலே கிடக்கும் எருமை தன் கன்றை நினைத்துச் சொரிந்த பாலை அந்த அன்னக் குஞ்சு பருகுகின்றது. பின்னர் தேரைகள் தாலாட்ட அவை உறங்கின. இந்தக் காட்சியை அப்படியே எங்கள் கண்முன்னே அவர் கொண்டு வந்து விடுவார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

வருடங்கள் உருண்டோடி என்னுடைய கல்லூரி நாட்களில் அவரை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய தந்தையார் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்ததால் கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரன் சுவாமி கோயிலில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் எங்களுக்கு வந்தது. நானும், என் தந்தையாரும் அந்நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்கு, முத்தமிழ் அரசியான சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் பாக்கியம் எனக்கு தரப்பட்டது. அப்போது, சில நொடிகள் அவருடன் எனக்கு பேச முடிந்தது.

காலச்சக்கரம் சுழலச்சுழல 29 ஆண்டுகள் சென்றன. சமீபத்தில் சென்னையில் மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தும் கானமும் இணைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக ‘காலமெல்லாம் கண்ணதாசன் – 5’ எனும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்ததும் நானும், என் தந்தையாரும் சென்றோம்.

நம் உரத்த சிந்தனை மாத இதழின் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் எங்களை முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு “உங்களோட ரசிகர்களாம், இவர்கள்,” என்று அறிமுகப்படுத்தினார். பின்னர், நாங்கள் எங்களின் மலரும் நினைவுகளை அவருடன் பகிர்ந்துக் கொண்டோம். சப்தமே இல்லாமல் பல மாணவர்களுக்கு அவர் செய்யும் கல்வி உதவியும் அன்று தான் எனக்கு தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவருடன் உரையாடியது எனக்கு மறக்க முடியாத தருணமாய் இருந்தது.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

இசைச்சுடர் முனைவர் லலிதா மோகனின் இனிமையான குரலில் கவியரசு கண்ணதான் இயற்றியவற்றில் நவராத்திரி சிறப்பாக ஒன்பது பாடல்களான ‘நவராத்திரி சிவராத்திரி, யார் தருவார் இந்த அரியாசனம், சொல்லடி அபிராமி,
சரவண பொய்கையில், நான் ஆட்சி செய்து வரும், ராமன் எத்தனை ராமனடி மருதமலை மாமுனியே, கோமாதா, குலமாதா மற்றும் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே,’ பாடல்களைப் பாடினார். மேலே குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களுக்கும் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், தன் சொல்லாற்றலில் தன்னுடைய இனிய அனுபவங்களையும் அழகாய் கோர்த்து ஒரு சொல்மாலையையே தொடுத்து விட்டார். அகவை என்பது ஒரு எண்ணிக்கை தான் என அவர் நிரூபித்து விட்டார்.

அவருக்கு தமிழ் மொழியின் மேல் உள்ள பெருமையும், கவியரசு கண்ணதான் பற்றிய மிகுந்த மரியாதையும் அவரை இந்த வயதிலும் இளமையாகவும், செயலாற்றத்துடனும் வைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கனிந்த அகவையிலும் அவருடைய கனிவான குரலாலும், சிரித்த முகத்தாலும், மேடையை தன்னுடைய ஆளுமைப் பண்பால் ஆளும் விதத்திலும், நேர்த்தியான உடை அலங்காரத்தாலும் அனைத்து தலைமுறைக்கும் அவர் ஒரு உத்வேகம் கொடுக்கும் ஒரு மாமனிதர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சில தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Related articles

Recent articles

spot_img