
பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்:
நூல் மதிப்புரை:
தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
இந்திய நாவல் எழுத்தாளர்களில் முக்கியமானவர் டாக்டர் எஸ்.எல். பைரப்பா. இவர் கன்னட மொழியில் எழுதிய சிறந்த நாவல் ‘பர்வா’. வியாசருடைய மகாபாரதத்தின் மற்றொரு நவீன வடிவம் பர்வா. மகாபாரதத்தில் காணப்படும் மாயை, மந்திரம் தொடர்பான சம்பவங்கள் எல்லாம் உண்மையா என்று பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு ஆய்வு நடத்திய பின் பைரப்பா இந்த நாவலை எழுதினார். இதில் வரும் மகாபாரத பாத்திரங்கள் எந்தவித அமானுஷ சக்திகளும் அற்றவர்களாக சாமானிய மனிதர்களாக உலா வருகிறார்கள்
‘ஆச்சார்ய கங்கிசெட்டி லக்ஷ்மிநாராயணா’ சாமானிய வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் தூய தெலுங்கு சொற்களால் சிறந்த வாக்கிய அமைப்போடு தெலுங்கில் பர்வா நாவலை மொழிபெயர்த்தார்.

புகழ்பெற்ற கன்னட நாவலாசிரியர் டாக்டர் எஸ்.எல் பைரப்பாவின் மிகப் புகழ் பெற்ற நாவல் பர்வா பிரசுரமாகி நாற்பது ஆண்டுகள் கழிந்தபின் பெங்களூரில் பைரப்பாவின் படைப்புகள் குறித்து நடந்த இலக்கிய அரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சாகித்ய அகாடமியின் தலைவர் திரு ‘சந்திரசேகர் கம்பரா’ பேசுகையில், “பைரப்பா அவர்கள் வியாசரின் மகாபாரதம் என்ற மகா காவியத்தை பர்வா என்ற நாவலாகப் படைத்து பழமையான நம்முடைய சம்பிரதாயத்தைக் காப்பாற்றியுள்ளார். அதன் மூலம் நம்மை ஒரு சிறந்த சம்பிரதாயத்திற்கு வாரிசாக்கியுள்ளார்” என்றார்.
தலைவர் திரு மாதவ் கௌசிக் பேசுகையில், “பைரப்பா வியாசரின் மகாபாரத்தை இந்திய கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார். பிறர் எழுதிய மகாபாரத படைப்புகளில் இருந்து பைரப்பாவின் படைப்பு வேறுபட்டது. இது வாசகர்களுடைய மனத்துக்கு நெருக்கமானது ஒவ்வொரு பாத்திரத்தின் அந்தரங்கத்தையும் பைரப்பா காட்டிய முறை இந்த நாவலின் புதுமைக்குக் காரணம்” என்றார்.

மகாபாரதம் என்றால் தாயாதிகளிடையே நடந்த போர். அரியணைக்காக நடந்த யுத்தம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதுவல்ல. என்ன நடந்ததென்றால்… என்று பைரப்பா ஆதாரங்களோடும் பகுத்தறிவோடும் இந்த நாவலை எழுதி சில யூகிக்க முடியாத உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளிக்கொணர்ந்த பல உண்மைகளில் முக்கியமானது “பெண்களின் மனப் போராட்டம்”.
அன்றைய பெண்கள் மெளனமாக எத்தகைய துயரத்தையும் விழுங்கிக் கொண்டு வாழ்ந்தார்கள். சிலர் வலிமையான காமம் என்ற புயற்காற்றில் சிக்கி மூச்சு முட்டி உயிரை விட்டனர். அரசியல் ஒப்பந்தங்களுக்குத் திருமணம் என்ற அழகான பொய்ப் பெயரைச் சூட்டி வஞ்சனை செய்ததால், தெரிந்து சிலரும் தெரியாமல் சிலரும் அதில் விழுந்து நலிந்தனர். ‘ஆரியர், அனாரியர், அர்தாரியர்’ போன்ற முகத்திரைகளின் விவாதத்தால், வாழும் மகிழ்ச்சியை இழந்து வாழ்க்கை நடத்தினர் சிலர். கதை முழுவதும் பெண்கள் வடித்த கண்ணீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது. அந்தக் கண்ணீர் அன்று மட்டுமின்றி, இன்றும் கூட சில கேள்விகளை எழுப்புகிறது. அவற்றுக்கு விடை அன்றும் கிடைக்கவில்லை. இன்றும் கிடைக்கவில்லை.
“அன்றைக்கிருந்த சமூக அரசியலை மனத்தில் கொண்டு விமரிசிக்க வேண்டுமே தவிர இன்றைய நவீன இயல்புகளோடு அன்றைய மகாபாரதத்தை விமரிசிக்கக்கூடாது” என்பது சிலருடைய கருத்தாக உள்ளது. மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிச் சிந்தித்தால் முதலில் நினைவுக்கு வருவது (குந்தி) ப்ருதாவும், (திரௌபதி) கிருஷ்ணாவும். கதை முழுவதும் இந்த இருவருடைய தியாகமும் கண்ணீருமே நிறைந்துள்ளது. அதற்கு அடுத்த முக்கிய பாத்திரம் காந்தாரி.
மிக நவீன கண்ணோட்டம் உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் குந்தியையும் திரௌபதியையும் ஏளனமாகவும் குறைவாகவும் மதிப்பிட்டு விமர்சிக்கிறார்கள். ஆனால் எதிர்மறையான சூழலிலும் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் போராடி, மிக உயர்ந்த ஆளுமைகளாக விளங்கிய அவர்கள் நடத்திய போராட்டம் அசாதாரணமானது. அறிவியல் பார்வையோடும், தர்க்கத்தோடும், பகுத்தறிவோடும் ஆராய்ந்து பார்த்தால், குந்தியும் திரௌபதியும் பேசிய சொற்களின் உண்மை விளங்கும்.
குந்தி:
பர்வா நாவலை ஆராய்ச்சிப் பார்வையோடு படித்து, பைரப்பா குந்தியை எவ்வாறு படைத்துள்ளார் என்று முதலில் பார்ப்போம். பாண்டுராஜாவுக்கு இருந்த குறைபாடு தெரிந்துதான் குந்தியோடு திருமணம் நடந்தது. அவனுடைய உடற்குறையோடு கூட, அவனுக்கிருந்த மாறுபட்ட மனநிலையால் குந்தி மனத்தளவிலும் உடலளவிலும் மிகுந்த வேதனையை அனுபவித்தாள். முடிந்தவரை முயற்சி செய்து தோல்வியடைந்த பாண்டு, தன்னுடைய கையறு நிலையை அங்கீகரிக்காமல் குந்தியையும் அவளுடைய குடும்பத்தையும் அவமதித்தான். இறுதியில் தன்னுடைய குறையை ஏற்றுக்கொண்டு அவளுடைய மடியில் தலை சாய்த்து அழுதான். அப்போது பூமாதேவிபோல் பொறுமை கொண்ட குந்தி பரந்த மனத்தோடு அவனை அணைத்து, இரு கரங்களால் தழுவி ஆதரித்ததாள்.
‘மத்ர’ தேசத்துப் பெண்கள் சிருங்கார மர்மங்களை நன்கறிந்தவர்கள். மாத்ரியும் அத்தகைய திறமை வாய்ந்தவளே. அவளாவது பாண்டுவைக் கிளர்ச்சியால் தூண்டுவாள் என்ற எண்ணத்தோடு அவளை பாண்டுவுக்குத் திருமணம் செய்தார்கள். திறமை வாய்ந்த மாத்ரியின் முயற்சிகளும் வீணாகவே, அவள் குந்தியிடம் முறையிட்டு அழுதாள்.
திருதராஷ்டிரனுக்கு பிள்ளைகள் பிறந்து விடுவார்களோ என்ற அச்சத்தாலும், கவலையாலும் ராஜ்ஜியத்தை விட்டு விலகி, மலைகளிலும் குன்றுகளையும் தாண்டி இயற்கையில் மடியில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு மானசிக அமைதி பெறுகிறார்கள். தேவகணங்களைச் சேர்ந்த அச்விநீ தேவதைகளிடம் உடல் வலிமைக்காக பாண்டு வைத்தியம் செய்து கொள்கிறான். எத்தனை ஆண்டுகள்தான் அவ்வாறு முயற்சி செய்ய முடியும்? தனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும். உலகில் தான் ஒரு தந்தை என்று பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்பினான். ‘நியோக முறை’ என்று ஒன்று உண்டு. அது ஆரியர்களுக்கு ஏற்புடையது என்று கூறி குந்தியைச் சம்மதிக்க வைத்து, வேறொரு ஆணிடம் அனுப்பினான். கணவன் சம்மதித்தால் நியோக முறை தவறல்லவாம். அதற்கு பதில் கல்யாணத்திற்கு முன்பே அவளுக்குப் பிறந்த கர்ணனை அவர்கள் அங்கீகரித்திருக்கலாம் அல்லவா? அதற்கு ‘ஆரிய சம்மதம்’ கிடைக்காது என்று தெரிந்ததால் குந்தி அஞ்சினாள். கர்ணனைப் பற்றிக் கூறவில்லை.
நியோகம் என்றால் என்ன? ‘கர்ப்பம் தரிப்பதற்காக’ மட்டுமே என்று மனத்திடம் கூறிக் கொள்ள வேண்டுமாம். உடலும் மனதும் அந்த செயலால் தூண்டப்படக் கூடாதாம். அதில் ஈடுபடுவது ஒரு பெண். அவள் உயிற்ற பொம்மை அல்ல. ‘கர்ப்ப தாரணை’ ஆனவுடனே அந்த ஆணை தந்தையாகக் கருத வேண்டும். அன்பைப் பகிரக் கூடாது. வாழ்க்கையில் மீண்டும் அவனை நினைக்கக் கூடாது. இதுதான் அதன் நியமம். அந்தச் செயலுக்கு முன்னும், பின்னும் கூட அவள் பெண் அல்லவா? உடலிலும் மனத்திலும் அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா? இது என்ன நியாயம்? இந்த தர்மத்தை அன்றும் இன்றும் கூட நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோமே, அது சரியா?
தேவர்களைச் சேர்ந்த யமன் வந்தபோது, குந்தி எத்தனை மனப் போராட்டத்தைச் சந்தித்திருப்பாள்? போகிறது. தர்மன் பிறந்தான். ஆனால் பாண்டுவுக்கு பலம் மிகுந்த இன்னொரு புதல்வன் வேண்டும் என்று தோன்றியது. வலிமை பொருந்திய (மருத்து) வாயுவை வரவழைத்தான்.
மீண்டும் சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு குந்தியை வாயுவிடம் அனுப்பினான். மருத்துவின் பலம் மிகுந்த கைகளின் அணைப்பில் குந்தி உண்மையிலேயே உடலாலும், மனத்தாலும் சந்தோஷத்தை அடைந்தாள். மனப்பூர்வமாக இருவரும் விரும்பி சங்கமித்தார்கள். “இதையெல்லாம் விட்டுவிட்டு என்னோடு வந்துவிடு” என்றான் வாயு.
குந்திக்கு பயம். அதனால் சம்மதிக்கவில்லை. அவளுடைய பரந்த மடி நிரம்புமளவுக்கு பீமன் பிறந்தான். ஆயிற்று. இந்த சம்பவங்களையெல்லாம் தெரிந்து கொண்ட இந்திரன் குந்தியின் மேல் மோகம் கொண்டு அவளிடம் வந்தான். கணவனின் அனுமதி தேவையல்லவா? சாமர்த்தியம் மிகுந்த இந்திரன் அதைச் சாதித்தான்.
மகா சாம்ராஜ்ஜியத்தை வெல்லக் கூடிய புதல்வன் பிறக்க வேண்டுமல்லவா? அந்த ஆசையால் பாண்டுராஜா சம்மதித்தான். மீண்டும் குந்தியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இந்திரனிடம் அனுப்பினான். அர்ஜுனன் பிறந்தான். இனி போதும். குந்தி மனத்தை திடம் செய்து கொண்டாள். குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தினாள்.
மாத்ரி சும்மாயிருப்பாளா? குந்தி பிள்ளை வேண்டி தேவர்களோடு சுகித்திருக்கையில் பாண்டுராஜுவும் பிள்ளைகளும் அவளிடம்தான் இருந்தார்கள். மத்ர தேசத்துப் பெண் மாத்ரி சிருங்காரத்தில் சிறந்தவள். அவளுக்கும் ஒரு மனம் இருந்தது அது உடல் சுகத்தைக் கோரியது.
பாண்டுராஜு குந்தியின் அனுமதியோடு அஸ்விநீ தேவதைகளிடம் மாத்ரியை அனுப்பினான். எதுவானாலும் அச்விநீ தேவதைகள் இருவரும் சேர்ந்தே செய்வார்கள். அவர்கள் மூலம் மாத்ரிக்கு நகுலனும், சகாதேவனும் பிறந்தார்கள்.
அதற்குள் பாண்டுராஜா உட்கொண்ட மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்து அவன் உடலில் துணிவும் தூண்டலும் பிறந்தன. அவனுடைய உற்சாகத்திற்கு அழகி மாத்ரியோடு கிடைத்த தனிமை துணை புரிந்தது. பலனாக பாண்டுராஜா உடலளவில் பெற்ற வெற்றியாலோ அல்லது தோல்வியாலோ மரணத்தைத் தழுவினான். அதற்குக் காரணம் தானே என்ற கழிவிரக்கத்தால் மாத்ரி கணவனின் உயிரற்ற உடலோடு சேர்ந்து தானும் எரிந்து சாம்பலானாள்.
இது தியாகமா? பயமா? பிள்ளைகளை தன்னால் வளர்க்க முடியாது என்ற கையறு நிலையா? குந்தி நன்கு வளர்ப்பாள் என்ற நம்பிக்கையா? எதுவானாலும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை அவ்விதம் முடிந்து போனது.
மீண்டும் குந்தியின் ஆளுமையை, ஹிடிம்பியோடு திருமணத்திற்கு பீமனை சம்மதிக்கச் செய்த சந்தர்ப்பத்திலும், திரௌபதியை ஐந்து பாண்டவர்களோடு திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்த சந்தர்ப்பத்திலும் பார்க்க முடிகிறது. வரப்போகும் யுத்தத்தில் ராட்சசர்களின் படையும், பாஞ்சாலத்தின் படையும் தமக்குத் துணையாக இருக்கும் என்பதால். பல சந்தர்ப்பங்களில் குந்தி நிதானமாக யோசித்து நிலையான மனத்தோடு முடிவெடுத்தாள்.
பதின்மூன்றாண்டுகளுக்குப் பிறகு பாண்டவர்கள் தாயைத் தம்மோடு வரச் சொன்னபோது, “போரில் வென்று அரியணையைப் பெற்ற பிறகு என்னை அழையுங்கள். வருகிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினாள்.
தனக்கு மணமாகும் முன்பே பிறந்த கர்ணனைச் சந்தித்து, பல ஆண்டுகளாக மறைத்து வந்த வேதனையை அவனிடம் வெளியிட்டாள். அவன் போரில் மரணமடைந்தான் என்று தெரிந்து போர்க்களத்திற்குச் சென்றாள். அவன் பிறந்த போது எந்த சடங்குகளும் செய்யாத நிலையில், இறுதிக் கிரியையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சடலங்களின் இடையில் தன் மூத்த புதல்வனைத் தேடி அலைந்தாள். பூமாதேவியைப் போன்ற பொறுமை கொண்ட குந்தியின் ஆளுமையை வியாசரின் மகாபாரதத்திலும், பைரப்பாவின் பர்வாவிலும் தெளிவாகக் காண்கிறோம்.
ஆச்சார்ய கங்கிசெட்டியின் தெலுங்கு மொழிபெயர்ப்பு, வசன நடையில் சாமானியர்கள் பேசும் வழக்குத் தெலுங்குச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டாலும், இயல்பாக, எளிதாக, ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு தேர் போலப் பயணிக்கிறது. கன்னடத்திலிருந்து பர்வாவை தெலுங்கு வாசகர்களுக்கு அளித்ததில் ‘ஆச்சர்ய கங்கிசெட்டி’ நன்றிக்குரியவராகிறார்.
(க்ருஷ்ணா) திரௌபதி:
திரௌபதி பிறந்தபோது வைத்த பெயர் க்ருஷ்ணா. அவளை அறிவால் புரிந்து கொள்ள முடியாது. உணர்வால்தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணை எந்த அளவு அவமதிக்க முடியுமோ, கீழிறக்க முடியுமோ அந்த அளவு அன்று அவமதித்தார்கள். இன்றும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அவளுடைய தந்தை ஆண்ட தேசத்தின் பெயரைக் கொண்டு, அதாவது த்ருபத நாட்டு இளவரசி என்பதால் திரௌபதி என்றழைத்தார்கள். ஆனால் அந்த பெயருக்கான பொருளை புரிந்து கொள்ளாத விஷம் நிரம்பிய நாக்கு கொண்டவர்கள் த்ரௌ ‘பதி’ என்றார்கள் அதாவது பல கணவர்களைக் கொண்டவள் என்று ஏளனம் செய்தார்கள். மகாபாரத இதிகாசத்தில் அவளுக்கு நேர்ந்த அவமானங்களும், அவள் எதிர்கொண்ட சவால்களும் அன்றும் இன்றும் கூட எந்த ஒரு பெண்னின் இதயத்தையும் உருகச் செய்யும். அவள் தன் முகத்தில் புன்னகை மலரைப் பூக்கச் செய்தாலும், அவளுடைய மனத்தின் சோகத்தை யாரால் அறியமுடியும்?
பைரப்பாவின் பர்வா நாவலிலும் திரௌபதியை அதுபோல் தான் சித்தரித்திருப்பாரோ என்ற அச்சத்தோடு படிக்கத் தொடங்கியபோது, ஒரு கோபம் இருந்தது. ஆனால் அவர் திரௌபதியை வர்ணிக்கும் போதோ, பிற பாத்திரங்களின் உரையாடலிலோ அவளுடைய கௌரவத்திற்கு இழுக்கு நேரும்படி எங்குமே எழுதவில்லை. அதோடு, பல சந்தர்ப்பங்களில் மீதியுள்ள பாத்திரங்களின் மூலம் அவளுடைய உயர்வைச் சிறப்பாகக் கூறுகிறார்.
ஹிடிம்பி உடலளவில் வலிமையான ராட்சசப் பெண். பீமன் போன்ற ஆணையும் இறுக்கிப் பிடித்து தூக்கி விடக் கூடியவள். கோபம் வந்தால் முதுகில் நான்கு குத்து விடக் கூடியவள். ஓடுவதிலும், வேட்டையிலும் சிருங்காரத்திலும் பீமனோடு சரிசமமாக நிற்கக் கூடிய சக்தி மிகுந்த பெண் அவள். அப்படிப்பட்ட முதல் மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் பீமன் திரௌபதியை நினைத்துக் கொள்வான் என்று பைரப்பா எழுதுவது திரௌபதியின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டு என்பதைக் கூறாமலே கூறுகிறது.
“அவள் சுகுமாரி. அவள் ஒரு மலர். அவளுடைய பேச்சிலும், மௌனத்திலும், புருவ நெரிப்பிலும், கடைக்கண் பார்வையிலும் அவளுடைய விருப்பத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அவள் ஆரியப் பெண். அப்படித்தான் இருப்பாள்” என்று எண்ணுகிறான் பீமன். அவன் பார்த்த முதல் பெண் அவள்தான். “அவள் எதையும் நேரடியாகக் கூறிவிட மாட்டாள். அவளுடைய உள்மனத்தை யாராலும் வெளிப்படுத்த முடியாது” என்று நினைத்துக் கொள்வான் பீமன். வெளியில் சொல்லாவிட்டாலும் அவளுடைய இதயத்தில் பற்றி எரிந்த நெருப்பை அவனால் மட்டுமே அணைக்க முடிந்தது.
அர்ஜுனன் தம் ஐவருக்கும் சேர்ந்து ஒரு மனைவியாக திரௌபதி இருந்தாலும், தனக்கு மட்டுமே பிரத்தியேகமாக சுபத்திராவை அழைத்து வந்த போது, “திரௌபதி, உன்னுடைய சக்தி நிறைந்திருக்கும் இடத்தில் வேறு யாரும் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள இயலாது” என்று மனத்தில் நினைக்கிறான். அத்தகைய சக்திப் பிரவாகமே வடிவெடுத்த மிக உயர்ந்த பெண்மணி திரௌபதி. பகடை விளையாட்டிற்குப் பின் துச்சாசனன் அவளுடைய புடவையை பிடித்திழுத்த போதும், கீசகன் அவள் மேல் கண் வைத்த போதும், அவமானம் தாங்காமல் துயரத்தால் அவளுடைய இதயம் நொறுங்கியது.
வில் வித்தையில் சிறந்த அர்ஜுனன், கடினமான இலக்கை ஒரே பாணத்தால் தாக்கி திரௌபதியை வென்றான். இங்கு பைரப்பாவின் உள்ளத்தை ‘கங்கிசெட்டி’ மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார். “திரௌபதி தன் தந்தையின் தோட்டத்திலிருந்து நழுவி நேராக அவனுடைய மடியில் விழுந்தாள்” என்று எழுதுகிறார். அதாவது அந்தப் பழத்தை அதற்கு முன் யாரும் பறிக்கவுமில்லை, சுவைக்கவுமில்லை.
போட்டியில் வென்ற ‘பொருளை’ தன்னோடு குயவனின் வீட்டின் பின்புறமிருந்த குடிசைக்கு அழைத்து வந்தான். மீதியிருந்த நான்கு சகோதரர்களும் அவளைப் பார்த்த உடனே அவள் பால் கவரப்பட்டதைக் கண்டு அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். குந்தி அவளருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்து, “உண்மையாகவே மிக அழகாக இருக்கிறாய். நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் முகம், கண்கள், மூக்கு வாய் உடலின் வளைவுகள், ஈரப்பு எல்லாம் அற்புதமாக உள்ளன. அசாத்தியமான களையோடு உள்ளாய். உன்னைப் போல இன்னொரு பெண் கிடைக்க மாட்டாள். என் ஐந்து புதல்வர்களையும் நீயே மணம் புரிந்து கொள். உனக்குக் கிடைக்கும் தாம்பத்திய சுகம் நம் ஆரிய வம்சத்தில் வேறு யாருக்கும் கிடைக்காது” என்று ஆசீர்வாதம் செய்தாள்.
இமயமலைப் பகுதிகளில் இது போன்ற வழக்கம் உள்ளது. இன்றைக்கும் ஆரியர்களின் மூல சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் தேவஜாதி இனம் இமயமலையின் உள்ளது. அதோடு. “என் ஐந்து புதல்வர்களும் உன் விருப்பத்தை ஒரு அங்குலம் கூட மீற மாட்டர்கள். நான் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று குந்தி திரௌபதிக்கு வாக்களித்தாள். ஐந்து பாண்டவர்களையும் ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களாகச் சேர்த்துத் தாங்குவது திரௌபதிக்கு ஒரு தியானமாக மாறியது. அந்த நிஷ்டையை அவள் வெற்றிகரமாகக் கடைப்பிடித்தாள்.
தினம் ஒருவராக திடகாத்திரமான ஐவரும் திரௌபதியைக் காதல் கடலில் மூழ்கடித்தாரகள். ஒருவர் ஒருநாள் வந்தால், மீதி நான்கு பேரும் அவளுக்காக ஏங்கினர். ஆனால் அதன் பிறகு வருடத்திற்கு ஒருவர் என்ற நியமத்தைக் குந்தி ஏற்படுத்தினாள். தன் கணவர்களின் மேன்மைக்காக அத்தகு தர்மத்தைக் கடைப்பிடித்த திரௌபதி எத்தனை சிரமத்தை அனுபவித்தாளோ? ஐவருக்கும் தன்னை சமர்ப்பித்துக் கொண்டாள்.
திரௌபதியின் கர்ப்பம் என்றால் வலிமையான கர்ப்பம். திருமணமான உடனே ஐவருக்கும் ஆளுக்கொரு புதல்வனாகப் பெற்றளித்தாள். பிரதிவிந்த்யன், ஸ்ருதசோமன், ஸ்ருதகீர்த்தி, சதாநிகன், ஸ்ருதசேனன் என்பன அவர்களுடைய பெயர்கள். பகடையில் யுதிஷ்டிரன் தோற்றபின் நடந்த பல பரிணாமங்களால் திரௌபதி வாழ்க்கையில் பலப்பல கஷ்டங்களையும் கண்ணீரையும் சந்திக்க நேர்ந்தது. திரௌபதியின் மனத்தில் நிகழ்ந்த கொந்தளிப்புகள் வாசகர்களின் இதயத்தைக் கலங்கச் செய்கின்றன. பர்வாவில் அவற்றை அற்புதமாகப் படைத்துள்ளார் ஆசிரியர்.
“உண்மையாக அரச தர்மம் என்றால் என்ன?” என்று கேட்டான் பிரதிவிந்த்யன். திரௌபதி கலகலவென்று சிரித்தாள். காரணம் புரியாவிட்டாலும் தாயோடு சேர்ந்து அவனும் சிரித்தான்.
“வேட்டையாடுவது, குடிப்பது, பெண்களின் தொடர்பு, சூதாடுவது” என்று விரக்தியில் பதிலளித்தாள் சிரிப்பினூடே. அந்தச் சிரிப்பு, அவள் மனத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஜுவாலை. எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு போன்றது அந்தச் சிரிப்பு. அந்தச் சிரிப்புக்குப் பல அர்த்தங்கள். அவளுடைய வேதனையும் ஆத்திரமும் நம் மனத்தை வந்து மோதுகின்றன. மிகவும் ஆழமாகப் பரிசோதனை செய்த பின் பைரப்பா அந்த சம்பவத்தை இவ்வாறு வர்ணித்தார் என்று தோன்றுகிறது.
உண்மைதான். மகாபாரதக் கதை முழுவதும் அந்த மூன்று வீடுகளைச் சுற்றியே நடந்தது அல்லவா? இதில் மறைமுகமாகப் பெண்களே ஹிம்சையை அனுபவித்தார்கள். அதிலும் முக்கியமாக பகடையாட்டத்திற்குப் பின் திரௌபதியின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் அரசை இழந்தான். தம்பிகளை இழந்தான். தன்னைத் தானே இழந்தான். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றான். ஒற்றை ஆடையில் இருந்த திரௌபதியை சபை மண்டபத்திற்திற்கு இழுத்து வந்தபோது அதைத் முதியவர்கள் யாரும் தடுக்க இயலாமல் போனார்கள். துஷ்டர்கள் நால்வரும் உரைத்த விபரீதமான சொற்களை யாரும் எதிர்க்க வில்லை.
அந்த நேரத்தில் திருதராஷ்டிரனும் காந்தாரியும் வந்து அந்தக் கொடுஞ்செயலை நிறுத்தினார்கள். அதன் பிறகு, மீண்டும் சூதாட்டதிற்கு தயாரான யுதிஷ்டிரனிடம், “வேண்டாம்” என்று வேண்டினாள் திரௌபதி. “நீ செய்வது தவறு என்று ஆண்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் அந்த நாட்களில் இல்லை” என்று திரௌபதி தன் ஐந்து புதல்வர்களிடமும் கூறுகிறாள்.
“பின் எப்போது உனக்கு தைரியம் வந்தது?” என்று சுதசோமன் கேட்டபோது, “தர்மத்தை அறிந்தவர் ஒரே ஒருவர்தான். வாசுதேவ கிருஷ்ணன். வீம்புக்காக மீண்டும் சூதாட்டத்திற்குச் சென்று தோற்ற யுதிஷ்டிரனை முகம் வீங்குமளவுக்குத் திட்டி புத்தி கூறினான் கிருஷ்ணன். “துரியோதனன் போன்ற தாயாதியின் மனம் எப்படி வேலை செய்யும் என்று தெரிந்து கொள்ளும் அறிவு உனக்கு இல்லாமல் போய் விட்டது. அந்த நேரத்தில் நான் அங்கு வந்திருந்தால் அது அதர்மம் என்று உனக்கும் துரியோதனனுக்கும் புத்தி கூறி இருப்பேன். கேட்காவிட்டால் இவருடைய கைகளையும் வெட்டியிருப்பேன். சூதாடுபவர்களுக்கு அதுதான் தண்டனை” என்றான் கிருஷ்ணன்.
தர்மபுத்திரன் தன்னை அவ்வாறு சூதில் தோற்றது தர்மமா என்று திரௌபதி கேள்வி எழுப்பியபோது பீஷ்மரோ துரோணரோ பதில் கூற வில்லை. ஐந்து கணவன்மார்களும் மெளனமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் உரைத்த பீமனின் சபதமே அவளுக்கு எதிர்காலத்தின் மேல் ஆசையை ஏற்படுத்தியது.
அந்தத் தீயவர்கள் தன்னைத் துகிலுரித்தி அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் வீரர்களான தன் தந்தையின் பெயரையும் சகோதரனின் பெயரையும் எடுத்துக் கூறி பயமுறுத்த வேண்டும் என்று முயற்சித்தாள். ஆனால் தீயவர்கள் அதைச் செவிமடுக்கவில்லை. “ராஜசூய யாகத்தில் அந்த யாதவ கிருஷ்ணன், சிசுபாலனின் கழுத்தை வெட்டினான் அல்லவா? அந்தக் கிருஷ்ணன் எனக்கு அண்ணன். அவன் வருவான் உங்களை ஒரு கை பார்ப்பான்” என்றாள் திரௌபதி. எல்லோருக்கும் அப்போதுதான் அச்சம் வந்தது.
திரௌபதி வாழ்நாள் முழுவதும் கடமைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தாள். விரதம், தர்மம், நியமம் என்று எல்லாமே அவளுக்குச் சிறைதான். போர்க்களத்தில் அபிமன்யு வீரமரணம் அடைந்தபோது பாண்டவர்களும் கிருஷ்ணனும் சுபத்ராவை சமாதானப்படுத்தினார்கள். அதன் பிறகு அடுத்த அறையில் கர்பவதியான உத்தரையின் தலையை திரௌபதி தன் மடியில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான். அதைப் பார்த்து அர்ஜுனன், “உன்னைத் தவிர இவளுக்கு ஆறுதல் கூறும் சக்தி வேறு யாருக்கும் இல்லை” என்றான். ஆனால் உப பாண்டவர்களான திரௌபதியின் புதல்வர்களை அஸ்வத்தாமன் அநியாயமாகக் கொன்ற போது திரௌபதி நெஞ்சு வெடிக்கும்படி அழுது அரற்றினாள். “அபிமன்யு இறந்தபோது சுபத்ராவுக்கு அனைவரும் ஆறுதல் கூறினார்கள். அர்ஜுனன் அவளை அணைத்துக் கொண்டு விக்கி அழுதான். கடோத்கஜன் இறந்தபோது பீமன் சடலத்தைப் தூக்கி வந்து தன் கண்ணீரால் புதல்வனின் உடலில் இருந்த ரத்த கரைகளைக் கழுவினான். இப்போது என் ஐந்து புதல்வர்களை நான் இழந்து நிற்கிறேன். என்னை அணைத்து ஆறுதல் கூறுவார் யாருமில்லை” என்று நினைத்துக் கொண்டாள்.
ஐந்து கணவன்மார்கள் இருந்தும் அவளுடைய இதயத்தில் தனிமை கூடு கட்டிக்கொண்டு இருந்தது போலும். பர்வா நாவலின் இறுதியில், உத்தரையின் கர்பத்திலிருந்து பிறந்த குழந்தையிடம் அசைவு இல்லாத போது, குந்தி திரௌபதியிடம் வந்து, “நீ மீண்டும் கர்ப்பம் தரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வம்சம் முடிந்து போய் விடும்” என்கிறாள்.
திரௌபதியின் கண்களில் அலட்சியம். தலையைக் குறுக்காக அசைத்து, “இந்த வம்சம் முடிவடைந்தால் என்ன நஷ்டம்?” என்று கேட்டாள். அந்தக் கூரான சொற்களின் மூலம் தன் எதிர்ப்பைக் காட்டினாள். அவளுக்குள் எத்தனை சமுத்திரங்கள் பொங்கிப் புரண்டனவோ யாரறிவார்?
பைரப்பாவைப் போல மேலும் சிலரும் மகாபாரதக் காலத்தைச் சேர்ந்த பெண்களின் துயரத்தையும் அவர்கள் வெளியில் சொல்லாமல் அனுபவித்த வேதனையையும் கண்டு பரிதாபப்பட்டு எழுதியுள்ளார்கள். சிலர் பெண் எழுத்தாளர்களை விட அற்புதமாக பெண்களின் இதயத்தை வர்ணித்தார்கள்.
கன்னட நாவல் பர்வாவைத் தெலுங்கில் மொழிபெயர்த்த கங்கிசெட்டி லக்ஷ்மிநாராயணா, “பைரப்பா பண்டிதர்களுக்காக அன்றி இந்த இதிகாசம் பாமரர்களுக்குப் புரியும்படி அவர்கள் பேசும் மொழியில் எழுதினார். மொழிபெயர்ப்பில் நானும் அதே போல் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரே விதமான மொழி வடிவத்திலும், வாக்கிய அமைப்பிலும் செய்தேன். இது என் சிறு முயற்சி” என்றார்.
ஆனால் கங்கிசெட்டி மிகப் பெரிய செயலைத் தலைமேல் தாங்கி தெலுங்கு வாசகர்களுக்கு அன்றைய வரலாற்றையும், கலாசாரத்தையும் பரிணாம மாற்றத்தையும் தெளிவாக எழுதி முழுமையைச் சாதித்தார்.
காந்தாரி:
மகாபாரதத்தில் மற்றொரு முக்கியமான உயர்ந்த பாத்திரம் காந்தாரி. பைரப்பா பர்வா நாவலில் காந்தாரியின் மறைத்த கண்களுக்குப் பின்னால் அசைந்த கரு நிழலைப் புரிந்து கொண்டு அவளுடைய உள்ளத்தை விளக்கினார். மகாபாரத்தின் பல பாத்திரங்கள், முக்கியமாக பெண் கதை மாந்தர்களின் இதய ஆழத்தில் இருந்த கம்பீரமான எண்ணங்களை இந்த பிரபஞ்சம் எவ்வாறு அறிய முடியாமல் போனதோ, அதே போல் காந்தாரியின் மன உலகத்தையும் இந்த வெளியுலகம் பார்க்க இயலாமல் போனது.
அவளுடைய விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளத் தவறிய தந்தையும், உடன் பிறந்தவர்களும் தீர்மானித்த குருடனோடு திருமணத்திற்கு எத்தனை நிசப்தமாக சம்மதித்தாளோ, பின்னர் அவள் தன் வாழ்நாள் முழுவதும் அதே கட்டுப்பாட்டோடு கணவனை அனுசரித்தாள்.
காந்தாரம் உயர்ந்த மலைகளோடும் அவற்றை மூடி மறைப்பது போல் வளர்ந்த பசுமையான மரங்களோடும், புதர்கள், சிகரங்கள் என்று தூய இயற்கை எழில் நிரம்பிய தேசம்.. நீல வானம், எல்லா பருவ காலங்களிலும் ஒன்றில்லாவிட்டால் ஒன்று அழகிய மலர்கள் மலரும் செடிகள், கொடிகள், இனிப்பான தண்ணீர், வெப்பம் என்பதே தெரியாத காற்று என்று இயற்கைச் சூழலில் வளர்ந்த பெண் காந்தாரி. அத்தனை அழகான தேசம் வேறொன்று இல்லை என்று தோன்றக் கூடிய தேசம். ஆனால் மண்ணில் சாரம் இல்லை. உலோகங்களோ, பொன்னோ செல்வமாக அங்கு இல்லை.
காந்தாரி நல்ல சிவப்பு. மலைப் பகுதிக்கே உரிய திடமான உடல்வாகு. மென்மையான பெண்மை. தூய நீர்நிலைகளில் எந்த வித மாசும் இல்லாத தன் அழகான முகத்தை ஆசை தீரப் பார்த்து மகிழ்வாள். தோழிகள் அவளுடைய மனத்தை மயக்கும் இனிமையான கற்பனைக் கதைகளைக் கூறி வந்தனர்.
பீஷ்மர், திருதராஷ்டிரனுக்குப் பெண்ணைக் கொடுக்கும்படி, உயர்ந்த காணிக்கைகள், ஆடை ஆபரணங்கள், நதிக்கரையில் விளைந்த சிறந்த தானிய வகைகள், பெரிய படை எல்லாவற்றையும் அனுப்பினார். தம்முடைய வைபவத்தைக் காட்சிப்படுத்தி ஆசை காட்டினாரா அல்லது படையைக் காட்டி எச்சரித்தாரா, தந்தைக்குப் பேராசை பிறந்ததா, படையைக் கண்டு ஏற்பட்ட அச்சம் நடுக்கத்தை உண்டு பண்ணியதா என்று தெரியவில்லை. பிறவிக் குருடனுக்குப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார். அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பது குறித்து அவளை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. அவள், அவருடைய கண் முன்னால் தன் மேல் வஸ்திரத்தை சர்ரென்று கிழித்து, கண்களை மறைத்துக் கொண்டாள். “குருடனுக்கு வாழ்க்கைப்படப் போகும் நான் அவன் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேன்” என்று எதிர்ப்போடு கண்களை மூடிக் கொண்டாள் போலும். அல்லது கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கு எதற்கு என்று நினைத்தாளோ தெரியவில்லை. பிறந்த வீட்டிலிருந்து கிளம்பும்போதே கண்களை மூடி மறைத்த கட்டோடுதான் கிளம்பினாள்.
மாமியார் வீட்டுக்கு வந்த பிறகு ஒரு ஒருமுறை கூட பிறந்த வீட்டுக்குச் செல்லவில்லை. “அங்கு சென்று என்ன செய்வது? யாரைப் பார்ப்பது? எப்படியோ என் சகோதரர்கள் இங்கு வந்து விட்டார்கள்” என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டாள் போலும். பிறந்து வளர்ந்த காந்தார தேசமும் அங்கிருந்த அழகிய சூழலும் வேறு. இங்கு மாமியார் வீட்டு அந்தப்புரம் வேறு. எத்தகைய நியமங்களுக்குத் தன்னைத் தானே அடக்கிக் கொண்டாளோ தெரியாது. ஒருவித ஜடத்தன்மை அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டது. சுயேச்சையாக, இயல்பாக வளர்ந்த பிறந்தவீட்டை விட்டு வந்த பின் புகுந்த வீட்டில் தன்னுடையதல்லாத வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.
முழுவதுமாக கணவனை அனுசரித்து நடப்பதே தன் வாழ்க்கை என்ற நிச்சயத்தோடு காந்தாரி வாழத் தொடங்கினாள். எல்லோரிடமும் ‘மகா சாத்வி’ என்று பெயரெடுத்தாள். அவளுக்கு கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ‘தர்மம் வெல்லும்’ என்பதில் நிச்சயமான முடிவோடிருந்தாள். அந்த விஷயத்தில் எப்படிப்பட்ட தடை நேர்ந்தாலும் உள்ளது உள்ளபடி உண்மையை எடுத்துரைப்பதற்கு அவள் பின்வாங்கவில்லை. கணவன் குருடனானாலும் சில தாசிப் பெண்களோடு அவனுக்குத் தொடர்பு இருந்ததை அவள் அறிவாள்.
திருதராஷ்டிரன் வெளியில் சொல்லாவிட்டாலும் அந்தரங்கத்தில் சிம்மாசனத்தில் மேல் விருப்பமும், தன் குருட்டுத்தனத்தின் மேல் சொல்லவியலாத வெறுப்பும் கொண்டிருந்தான் என்பதை காந்தாரி உணர்ந்தாள். அவனுக்கு இல்லாத கண் பார்வை தனக்கும் தேவையில்லை என்று நினைத்தாளோ அல்லது தனக்கு இல்லாத கண்பார்வை மனைவிக்கு இருந்தால் தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தாளோ தெரியாது. ஆனால் திருதிராஷ்டிரனைப் போன்றவனோடு அத்தனை ஆண்டுகள் சுகமாகக் குடும்பம் நடத்திய மகா பதிவிரதையான காந்தாரி கம்பீரமான இதயம் கொண்டவள். பூஜிக்கத் தகுந்தவள். அனைவராலும் தேவதையாக கௌரவிக்கப்பட்டாள் அப்படிப்பட்ட மனைவி பற்றி திருதராஷ்டிரனுக்கு கர்வம் இருந்தது. “குரு வம்சத்தில் மட்டுமே அல்ல. முழு ஆரிய வர்ஷத்திலேயே ஈடிணையில்லாத தேவி காந்தாரி” என்ற கர்வம் அவன் மனத்தில் இருந்தது.
கர்ணனின் மனத்தில் காந்தாரி பற்றி எத்தனை உயர்ந்த மதிப்பு இருந்தது என்பதைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது. குருக்ஷேத்திர யுத்தத்திற்கு முன்பு குந்தி கர்ணனைச் சந்தித்து அவனுடைய பிறப்பின் ரகசியத்தைக் கூறினாள். அப்போது கர்ணன், “என்னை வளர்த்த தாய் ராதா இறந்த பின் என் நண்பனின் தாய் காந்தாரிமாதா எனக்குத் தாயில்லாத குறையைத் தீர்த்தாள். ஹஸ்தினாபுரத்தில் மட்டுமல்ல எந்த தேசத்திலும் காந்தாரி போன்ற ஒரு தாய் கிடைப்பாளா என்பது சந்தேகமே. கணவனுக்காக அத்தகு தியாகம் செய்யும் பெண்களில் மட்டுமே அத்தகு முழுமையான தாய்மை மலரும் என்று தோன்றுகிறது. எப்போது அவள் பாதங்களைப் பணிந்து, “தாயே, கர்ணன் உன் பாதங்களைப் பணிகிறேன்” என்று கூறினாலும், பாசத்தோடு என் தலையை இரு கரங்களாலும் வருடி, “தீர்க்காயுவோடு வாழ்வாய், மகனே” என்று ஆசீர்வாதம் செய்வாள். அவள் தன் அன்புள்ளத்தை தன் புதல்வர்களோடு கூட எனக்கு கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தாள்” என்று கூறுவது காந்தாரியிடம் இருக்கும் தாய்மை உள்ள்த்திற்கு சிறந்த சான்று.
காந்தாரி தன் மனக் கண்ணால் சுற்றிலும் நடப்பதை உணரும் திறன் மிகுந்தவள். நல்ல மனத்தோடு குந்தியின் மன வேதனைகளைப் புரிந்து கொண்டாள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானங்களையும், கொந்தளித்த அவளுடைய நெஞ்சையும் காந்தாரி அறியாதவள் அல்ல. நிறைந்த அரச சபையில் அவமதிப்பைச் சந்தித்த திரௌபதியின் மனம் எத்தகைய வேதனையில் வருந்தும் எனபதை சக பெண்ணாக காந்தாரியால் யூகிக்க முடிந்தது. அதனால்தான் கணவனோடு சேர்ந்து சென்று துச்சாசனனை அவளால் தடுக்க முடிந்தது. அத்தகு கொடுஞ்செயலைச் செய்த தன் புதல்வனுக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்று அஞ்சிக் கொண்டே இருந்தாள். எடுத்துச் சொன்னாலும் தன் புதல்வர்கள் கேட்கமாட்டார்கள் என்று தெரிந்து செய்வதறியாது இருந்துவிட்டாள்.
குருக்ஷேத்திரத்தில் வரிசையாகத் தன் புதல்வர்கள் மரணித்து வந்த செய்தியைக் கேட்டு இதயம் வெடிப்பது போல் அழுதாள். சஞ்சயன் கூறி வந்த கடுமையான கெட்ட செய்திகளை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தான் சுமந்து பெற்ற குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த அந்தத் தாயின் இதயம் சுக்கு நூறானது. அவளுடைய் ‘கர்ப்ப சோகம்’, ‘கூடாது’ என்று நினைத்தாலும் நிற்காமல் சாபமாக மாறியது. அவள் ஸ்ரீகிருஷ்ணனின் வம்சத்திற்தே சாபம் கொடுத்தாள்.
கடைசியில் கிருஷ்ணன் காந்தாரியிடம், “தாயே, உன்னோடு மனம் விட்டு ஒரு விஷயம் பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை இருந்தது. எதுவும் மறைக்காமல் உண்மையைக் கூறும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறையாவது வரவேண்டும். உன்னுடைய அந்தரங்கத்தைத் திறந்து கூறு. மகாராஜா பிறவிக் குருடர். நீ ஏன் கண்ணை மறைத்துக் கொண்டாய்?” என்று கேட்டான்.
“கண் தெரியாதவனுக்கு என்னைக் கட்டி வைத்தால், அவன் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று என் இரு கண்களையும் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு என்னனயும் நான் பார்த்துக் கொள்ளவில்லை. என்னைப் பார்த்து ரசிக்கக் கூடிய கணவன் எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் எல்லோரும் என்னை “மகா சாத்வி, பதிவிரதை” என்று புகழ்ந்த போது அதன் ருசி என் தலையில் ஏறியது. அந்தப் பட்டங்களை இழப்பதற்கு என் மனம் விரும்பவில்லை. நான் கண்ணைக் கட்டிப் பார்வையை மறைத்துக் கொண்டதன் காரணத்தை மறந்து, இந்த ஹஸ்தினாபுரத்தின் அந்தப்புரமக்கள் வைத்த புனிதப் பெயர்களில் திளைத்து மூழ்கிப் போனேன். இன்று நீ என் மனசைத் தட்டி திறந்துவிட்டாய். இதுவரை என் பிள்ளைகளில் யாரும், “அம்மா, நீ ஏன் இப்படி குருடியானாய்? எங்களைப் பார்ப்பதற்காகவாவது கண்களை திற” என்று கேட்கவில்லை. என் புதல்வி கூட கேட்கவில்லை. தாயின் செயற்கையான குருட்டுத் தனத்தில் புனிதத் தன்மையும் தெய்வீகமும் நிற்கிறது என்று என் கால்களைப் பணிந்து வணங்குவார்கள்” என்று காந்தாரி கூறிய சொற்களைக் கேட்டு சுற்றிலும் வீசிய காற்று கூட அவள் மனத்தைப் போல உறைந்து விட்டதோ என்று எண்ணினான் கிருஷ்ணன்.
“தாயே, நீ பிறவிக் குருடியல்ல. மேலே துணியைக் கட்டிக் கொண்டதால் பார்க்கும் சக்தி போய் விடாது. இப்போதாவது ஏன் அதனை எடுத்து விட்டு சுற்றிலும் பார்க்கக் கூடாது?” என்று கூறி, மென்மையாக அவளுடைய கண் கட்டுகளை அவிழ்த்தான்.
“கண்களைத் திறந்து பார், தாயே. கண்ணை மறைப்பதற்கு முன் காலையில் தூங்கி எழுந்ததும் கண்களைத் திறப்பாய் அல்லவா, அதே போல் திற” என்றான்.
அவளுடைய இரண்டு இமைகளையும் கிருஷ்ணன் தன் விரல்களால் மெதுவாக வருடினான். நிதானமாக அவள் கண்களைத் திறந்தாள். பாண்டவர்கள் அவள் எதிரில் வந்து காலில் விழுந்து வணங்கினார்கள்.
“க்ருஷ்ணா, வந்து வணங்கு” என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறியவுடனே திரௌபதி வந்து காந்தாரிக்கு நமஸ்காரம் செய்தாள். காந்தாரி திரௌபதியின் தலையை வருடினாள். தன் கை விரல்களை அவளுடைய தலைமுடியில் நுழைத்து வருடினாள். பாசத்தோடு அவளை எழுப்பி இரு கரங்களால் அணைத்துக் கொண்டாள்.
எல்லாவற்றையும் இழந்து நின்ற திருதராஷ்ட்ரனுக்கு காந்தாரியையும் கிருஷ்ணன் தன்னிடமிருந்து பிரித்து விட்டான் என்ற வருத்தம் இருந்தது. எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு எதையோ பெற்ற மகிழ்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் குருட்டுத் தனத்திற்குப் பிறகு எதைப் பார்ப்பது என்று யோசித்தாள். உயிரோடிருக்கும் போது என்றுமே பார்க்காத தன் புதல்வர்களை இப்போது உயிரற்றவர்களாகப் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தாள்.
போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு எங்கு பார்த்தாலும் சடலங்கள். உடைந்த உடல் பகுதிகள், ஆபரணங்கள், விற்கள், ரதங்கள், குதிரைகள், யானைகள் எல்லாம் கிடந்தன. அவளால் அவற்றைப் பார்க்கச் சகிக்கவில்லை. பயங்கரமான அந்த காட்சிகளைப் பார்த்து அவளுடைய பார்வை சிதறியதா அல்லது அவள் மீண்டும் குருட்டுத் தன்மையை விரும்பி வரவேற்றாளா தெரியாது. எல்லாம் கிருஷ்ண மாயை.
மந்திரம், மாயை, அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாவற்றையும் பார்த்து, “ராமாயணமும் மகாபரதமும் உண்மையில் நடந்த கதைகள் தானா?” என்று சந்தேகம் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயல்பே. அந்த சந்தேகங்களைத் தீர்ப்பவர்களையோ, தீர்க்கும் சூழலையோ நம் கல்வியமைப்பு உருவாக்கும் வாய்ப்பு இல்லை. வாதத்திற்கு ஏற்புடைய ‘பர்வா’ போன்ற நூல்களை பாட நூல்களாக வைப்பதற்கோ, குறைந்தபட்சம் குறிப்பு நூலாக வைப்பதற்கோ கூட பல கல்லூரி, பலகலைக் கழகங்களுக்குத் தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரான பைரப்பாவின் பர்வா நாவல் எத்தனை சிறந்ததோ, அதே போல் அவர் எழுதிய “நான் ஏன் எழுதுகிறேன்?” என்ற கட்டுரையும் மிக முக்கியமானது. ஒரு எழுத்தாளர் உண்மையைக் கண்டு எழுத எத்தனை சிரமங்களை மேற்கொள்வார் என்பதை அறிய வேண்டுமென்றால் பைரப்பாவின் மானசிக, உடல் பிரயாணத்தைப் பற்றிப் படிக்க வேண்டும். தன்னுடைய சொந்த பணத்தைச் செலவு செய்து எத்தனை இடங்களுக்கு அலைத்தார், என்னென்ன அவஸ்தைகளை அனுபவித்தார், என்பவற்றை அறிந்து கொள்ள வேண்டும். கட்டுக்கட்டாக வரலாற்றையும், புராணங்களையும் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களுக்கு விழிப்பு ஏற்பட வேண்டுமென்றால் பைரப்பாவின் “நான் ஏன் எழுதுகிறேன்?” கட்டுரையைப் படித்துத் தீர வேண்டும். மகாபாரதம் நிகழ்ந்த எல்லா இடங்களுக்கும் சென்று அங்கிருப்பவர்களோடு பேசி, அந்தந்த இடங்களைப் பார்த்து, மனம் ஒன்றிப் போய் இனி எழுதத் தீரவேண்டும் என்ற தீவிரமான உத்வேகத்தோடு பர்வாவை எழுதத் தொடங்கினார். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் அவர் செய்த அந்தப் பெரிய முயற்சி எத்தனை பேரைச் சென்றடைந்தது? பர்வாவைப் பற்றிய தெரியவிட்டாலும் பரவாயில்லை. நான் என் எழுதுகிறேன் என்ற கட்டுரையாவது இலக்கிய ஆர்வலர்கள் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாட நூலாக வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், மகாபாரதக் கதை நடந்த இடங்களைப் பற்றி ஒரு புரிதல் ஏற்படும். ஆராய்ச்சி என்றால் எத்தனை அர்பணிப்போடு நடத்த வேண்டும், எத்தனை முயற்சி செய்ய வேண்டும் என்பது தெரியும். தொலைவான இடங்களுக்குப் பயணம் செய்வது, செய்திகளைச் சேகரிப்பது, அவற்றை தினமும் சிந்தித்து, இரவெல்லாம் எழுதுவது என்று இடைவிடாமல் உழைத்த பைரபபவின் உடல் நலம் சீர் கெட்டது. “தலையில் இருப்பதை எல்லாம் எழுத்தில் இறக்கினால் தவிர உடல்நலம் சீராகாது” என்றார் டாக்டர். சுமார் நான்கு ஆண்டுகள் பிடித்ததாம் பர்வாவை எழுதி முடிக்க. அப்போது அவருடைய வயது இருபத்தெட்டுதான்.
நவீன கண்ணோட்டத்தோடு பைரப்பா கன்னடத்தில் எழுதிய பர்வா நாவல் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட வேண்டிய ஒன்று.




