தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த செலவில், பயனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கி, தேவையான பொருள்களையும் வழங்கியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த சமூகப் பரவலை தடுக்க வேண்டும் என்று கருதி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைகள் பூட்டப் பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட தடை. அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என மக்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என சுமார் 1000 பேருக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்க முடிவு செய்தார்.
அதன்படி அரிசி, புளி, பருப்பு, கொண்டைக்கடலை, எண்ணெய், மிளகு, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சாம்பார்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகம் செய்ய வசதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
தமிழகம் முழுவதும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரிய கோவில்களில் வேலை பார்க்கும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், மற்றும் பணியாளர்களுக்கு, மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறிய கோவில்களில் பணிபுரிபவர்களுக்கு, மாத ஊதியம் கிடையாது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கிராம பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை சார்ந்துள்ள அர்ச்சகர்கள், கோவில் திருவிழாக்கள், மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்கின்றனர். தமிழக கோவில்களில், பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள், நாள் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும் காலம். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக, கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இதனால், பல ஆயிரக்கணக்கான பூசாரிகள், அர்ச்சகர்கள், வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் , சிவகாசி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூபாய்10,000 வீதமும் கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5000 வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 80ஆயிரம் நிதி உதவியை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார்.
அவரது இந்த நேரமறிந்து செய்த உதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுமக்களும் பெருமளவில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.