உலக நாடுகள் முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்கத் தவறினால் கொரோனா உலக அளவில் மேலும் மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் டெட்ரஸ் அதனாம் கிப்ரயெசஸ் (Tedros Adhanom Ghebreyesus) மனித குலத்தின் மிகப்பெரிய ஒரே எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனாவுக்கு எதிரான போரில் பல நாடுகள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பல தலைவர்களின் கருத்துகள் கொரோனாவை குறைத்து மதிப்பிடச் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் கொரோனாவின் கோரப் பசிக்கு 13 கோடி மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவித்த அவர், அதில் இருந்து தப்ப குறுக்கு வழி ஏதும் இல்லை என்றார்.
எனினும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு அரசும், தலைவரும், தனி நபரும் தங்கள் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினால் பரவல் சங்கிலித் தொடரை துண்டிக்க முடியும் என்று தெரிவித்தார்.