ஈவேரா., சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நியாயமற்ற வகையில் நடந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் இதற்காக பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறையின் காவலர்கள் மூன்று பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர், இந்த மூன்று பேரின் பணியிட மாற்றத்துக்கான காரணத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டனர். இதன் பின்னரே இந்தக் காவலர்கள் மூன்று பேரும் செய்த நேர்மையற்ற செயல்கள் வெளி உலகத்துக்கு தெரியவந்தன.
இம்மூவரின் பணியிட மாற்றப் பின்னணியில் அவர்கள் கடந்த மாதம் ஈ.வே.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்று இருவரும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
கடலூர் முதுநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ரங்கராஜ், அசோக், ரஞ்சித் உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அந்த சிலையின் கீழ் நின்று படம் எடுத்துக் கொண்டனர். இந்த செல்பி படம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலானது. எனினும், காவலர்கள் மூவரும் அந்தப் படத்தை எடுத்தபோது மூன்று பேருமே காவல் சீருடையில் இல்லாமல் கறுப்பு நிற சட்டை அணிந்தபடி எடுத்த படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அரசுப் பணியில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ஒரு சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வண்ணம் தங்களை அடையாளப் படுத்தி வெளியிட்ட விதத்தை நேர்மையாளர்கள் அனைவரும் கண்டித்தனர்.
இந்த நிலையில்தான், அவர்கள் மூவரும் கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதை அடுத்து அவர்கள் ஈ.வே.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னணியிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அதனுடன் தகவல் பரவியது.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து, விடுதலை இதழில் எழுதவும் செய்தார். மேலும் நடப்பது அண்ணா ஆட்சியா, ஆச்சாரியார் ஆட்சியா? என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
கி.வீரமணியைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், பழிவாங்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களையும் பணியிடமாற்றம் செய்துள்ள நடவடிக்கை சரியல்ல; அவர்களை மீண்டும் பழையபடி அதே காவல்நிலையத்திலேயே பணியமர்த்த வேண்டும் என்று கோரினார். மேலும் குறிப்பாக, இது பெரியார் வழிவந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் இயங்கும் ஆட்சி என்பதை அதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அடிக்கோடிட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் கருத்து மூலமும் ஆளும் அரசு ஈ.வே.ரா., கொள்கைகளைப் பரப்பும் அரசுதான் என்பதை இந்த அரசே உறுதிப் படுத்தி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படுகிறது.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த #காவலர்கள் மூவர்மீது #அரசு_நடவடிக்கை!
விசிக கண்டனம்!
பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்களை மீண்டும் அதே காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டும். இது பெரியார் வழிவந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரில் இயங்கும் ஆட்சி என உறுதிப்படுத்த வேண்டும்…. என்று ஓர் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன்.
தொடர்ந்து, ஈ.வேரா வழிவந்தவர்களாகக் கூறிக் கொண்டிருக்கும் வை.கோ., உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் டிவிட்டரில் இது குறித்து கண்டன அறிக்கைகளைப் பதிவு செய்தனர்.
ஆனால், அரசின் துறையைச் சேர்ந்த, அதுவும் சட்டம் நீதி ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள், கட்சி ரீதியாகவும், கொள்கைகள் ரீதியாகவும் இயங்குவது, காவல்துறை அடிப்படை அமைப்பு விதிகளிலேயே தவறு என சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையின் சீருடைப்பணிகள் விதிகளின்படி காவலர் பணியில் சேரும்போதே அவர் எந்தவொரு இயக்கத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ, சித்தாந்தத்துக்கோ சாதகமாகவோ அதை பிரதிபலிக்கும் வகையிலோ செயல்படக்கூடாது என்று உறுதிமொழி ஏற்கப்படுகிறது. குறிப்பாக, சீருடைப்பணியில் உள்ள காவலர்கள், இந்த விதிகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம்.
பணிக்கு பொருந்தாத வேறு பணிகளில் சீருடையிலோ, சீருடையில்லாமலோ அவர்கள் மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல் ஈடுபடக்கூடாது என்பதும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை…
ஈ.வே.ரா., கொள்கைகள் என்பது, சமூகத்தில் பிரிவினையை போதித்த, குறிப்பிட்ட சமூகங்களின் மீது, மத இனங்களின் மீது காழ்ப்புணர்வை விதைத்த பிரிவினைக் கொள்கைகள் என்பதும், அதனை அரசின் நிர்வாகத்தில் பணியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது, அவர்கள் சார்ந்த அரசுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறுகின்றனர் சமூகத் தளங்களில்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, நீதிபதிகளாக வேலை செய்த சிலர், இவ்வாறு தங்கள் கருத்துகளில் ஈவேரா.,வியம் பேசுவதும், பணிஓய்வு பெற்ற பின்னர் முழு நேர பிரசாரகர்கள் போன்று பேசுவதும் தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி, அவமானம், அவமரியாதை என்றும் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
காவல் நிலையத்துக்கு ஏதோ ஒரு காரணமாக எதிர்தரப்பு புகார் வந்தால், இதுபோன்று ஈவேரா.,வியம் பேசும் காவலர்களே கட்சி, அமைப்பு விசுவாசத்தின் காரணமாக முன் வந்து அந்தத் தரப்புக்கு உளவுத் தகவல் சொல்லி, நீதியை சாகடிப்பதும், அநீதி இழைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால், காவல்துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி, பொதுமக்கள் காவல்துறையை அணுகவே அச்சப்படும் சூழல் அதிகரிக்கிறது. மேலும், இது போன்று பக்க சார்புடன் அடியாள் வேலை பார்க்கும் காவலர்களால், ரவுடியிசமும் கட்டப்பஞ்சாயத்தும்தான் காவல் துறையில் அதிகரிக்கிறது…. எனவே இவர்கள் ஒரு முன்னுதாரணமான செயலாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டு, துறை ரீதியான விசாரணை முன்வைக்கப் பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால், வழக்கம் போல், இந்த காவலர்கள் பணியிட மாற்றத்தின் பின்னணியில் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்பது போல் காரணங்கள் அடுக்கப் பட்டு, ஈவேரா., சிலைக்கு மாலை போட்டு கருப்புச் சட்டை அணிந்து கொள்கை பேசியது தான் காரணம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப் படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் உயரதிகாரிகள், ஈவேரா., சிலைக்கு மரியாதை செலுத்திய விவகாரத்தால் செய்யப்பட்ட இடமாற்றல் கிடையாது என்றும் அதையும் கடந்து வேறு பல நடத்தை தொடர்புடைய பிரச்னைகள் நிலவியதால்தான் அந்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
“மூன்று காவலர்களும் காவல்துறை நடத்தை விதிகளை மீறி வேறு பல விஷயங்களில் வரம்பு மீறி செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் காவலர்களுக்காக வகுக்கப்பட்ட நடத்தை மாண்புகளை மீறும் வகையில் சில மாதங்களாகவே இருந்தன….
சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து அதில் சில தகவல்களை பரப்பி வந்ததாகவும், அதில் ஏற்கெனவே சில காவலர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் ஒரு சங்கம் போல இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே அவர்கள் மீதான பணி மாற்றல் நடவடிக்கைக்கு காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்ததால் மூன்று காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு இருந்தது உண்மையானால், இதன்காரணமாகவும் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கவேண்டும், அதைவிட குறிப்பாக, ஈவேரா.,வியம் பேசும் தன்மைக்காக நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். தமிழக காவல் துறை, நீதியை நிலைநாட்ட தவறிவிட்டது! நிச்சயமாக, காவலர்களிடையே ஒழுங்கீனம் பரவவும் வழிசெய்துவிட்டது!