நாடாளுமன்ற மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த 11 இடங்களை நிரப்புவதற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் மூலம் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த 11 இடங்களுக்குமான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக., சார்பில் 8 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக வேட்பாளர் நரேஷ் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், இந்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த 11 பேரில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் ஒருவர். இதை அடுத்து மாநிலங்களவையில் பாஜக.,வின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் பாஜக., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
பாஜக.,வின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 92 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் வரலாற்றில் இல்லாத அளவு காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 38 ஆக சரிந்துள்ளது.
பாஜக., மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், கூட்டணிக் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் ஆதரவுடன் இனி அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வழி பிறந்துள்ளது.
பாஜக., தனது தேர்தல் அறிவிப்பாகவும், கொள்கையாகவும் கொண்டிருந்த மூன்று முக்கிய விஷயங்களில் இரண்டை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டது. அயோத்தி ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை கடந்த இரு வருடங்களில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், அடுத்து மூன்றாவது முக்கியக் கொள்கையான பொது சிவில் சட்டம் என்பதை சாத்தியமாக்கும் என்பதற்கான முன்னேற்பாடாக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பை சுட்டிக் காட்டுகின்றனர்!