கமலின் மக்கள் நீதி மய்யம் திமுக.,வுடன் கூட்டு வைக்கப் போவதாகவும், இரண்டு எம்பி சீட்டு ஒதுக்கப்படும் எனவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானதும், அதனை அவசர அவசரமாக மறுத்துள்ளார் கமல்.
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஊழல் எதிர்ப்பு குறித்து பேசி வரும் கமல், என்னதான் திமுகவுடன் நெருங்கினாலும், திமுக., அவரை உதாசீனப் படுத்தியே வந்துள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் அவ்வப்போது திமுக., கூட்டங்களைக் கூட்டினாலும், கமலை கூட்டாக்காமல், கமலின் கட்சியை அனைத்துக் கட்சியில் சேர்க்காமல் இருந்து வந்தது. இப்படி, கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக இதுவரை ஒரு அங்கீகாரமும் அளிக்காத நிலையில், திமுக., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவதாக செய்தியில் கூறினால் கமலுக்கு கோபம் வராமலா இருக்கும்!
அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அணி உருவாகி வருகிறது என்றும், இதில் மக்கள் நீதி மய்யம் இணையும், அதற்கு 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்க உள்ளதாகவும் செய்தி சேனல் ஒன்றில் தகவல் வெளியானது.
உடனே இதற்கு கமல் தனது ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,
“மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளை நமதே” – என்று கூறியுள்ளார்.