மேன் வெர்சஸ் வைல்ட்… நிகழ்ச்சி இப்போது பரபரப்பைக் கிளபியுள்ளது. இதில், இதுவரை காணாத பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வித்தியாசமான ஒரு பக்கத்தைக் காணலாம் என்று உறுதி கூறியுள்ளனர்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான், மேன் வெர்சஸ் வைல்ட். பிரிட்டனைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் ‘பேர் க்ரில்ஸ்’ ஸுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இந்த தொலைக்காட்சி தொடரில் தென்படப் போகிறார்.
இம்மாதம் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் இந்த எபிசோடு ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு தொடர்புடைய ‘ப்ரோமோ’ முன்னர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஒரு ‘இன்ட்ரோ ப்ரோமோ’ வெளிவந்துள்ளது. 4.10 நிமி., நீளம் கொண்ட இந்த ப்ரோமோவில், நரேந்திர மோடி சுமார் அனைத்துப் பிரேம்களிலும் தென்படுகிறார். இந்த எபிசோட் மூலம் அவர் மக்களுக்கு என்ன செய்தி தெரிவிக்க போகிறார் என்பதை இதில் வெளியிட்டுள்ளார்.
“யாரையும் துன்புறுத்துவது என் வழிமுறை அல்ல…!”
உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படம்பிடிக்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி தொடரில் பிரதமர் நரேந்திர மோடி தன் மனதிலுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. பாரத தேசத்தின் தத்துவத்தை அவர் உலகிற்கு வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.
உடனுக்குடன் ஒரு ஈட்டி போன்ற கருவியை தயார் செய்த ‘பேர் க்ரிசல்ஸ்’ அதை பிரதமர் மோடியின் கையில் கொடுத்து கொடிய மிருகங்கள் எதிர்ப்பட்டால் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்று விவரிக்கையில்… “ஹிம்சை என் வழிமுறை அல்ல!” என்று பிரதமர் மோடி தெளிவாகக் கூறியது இந்த எபிசோடில் தெரிகிறது.
யார் ஆனாலும் எது ஆனாலும் கஷ்டப்படுத்துவதோ துன்புறுத்துவதோ என் கலாச்சாரம் அல்ல என்று அதில் பிரதமர் மோடி விவரித்துள்ளார். அதனால் தனக்கு ஆயுதங்கள் தேவை இல்லை என்றார்.
பின்னர், “இதனை உங்கள் திருப்திக்காக வைத்துக் கொள்கிறேன்” என்று பேர் கிரிசல்ஸிடம் கூறிய மோடி அதனை கையில் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறார்….
இயற்கைக்கு விரோதமாக நடந்து கொண்டால் அழிவுதான்….!
இயற்கையை வழிபடுவது பாரத தேச இயல்பு என்று மோடி கூறியுள்ளார். இயற்கைக்கு விரோதமாக நடந்து கொண்டால் அழிவு நேரும் என்று எச்சரித்தார். இயற்கையை அழிக்க வேண்டும் என்று மனிதன் முடிவெடுத்தால் அவனுக்கு அனைத்தும் ஆபத்தாகவே முடியும் என்றும் சக மனிதன் கூட அவனுக்கு ஆபத்தானவன் ஆவான் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இயற்கையைப் பாதுகாப்பதற்காக முயற்சித்தால் அது நம்மை பாதுகாக்கும் என்றும் நம் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் என்றும் விளக்கம் அளித்தார் மோடி.
இயற்கையை ரசிப்பது தன் விருப்பம் என்றும் தன்னுடைய 17, 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி இமயமலையில் காலம் கழித்ததாகவும் கூறியுள்ளார் மோடி.
தூய்மை இந்தியா குறித்துக் கூட நரேந்திர மோடி இதில் பேசி உள்ளதாகத் தெரிகிறது. இது பற்றி அவர் பேர் க்ரில்சுடன் உரையாடுவதை இந்த க்ளிப்பிங்கில் காணமுடிகிறது.
தனி மனித சுகாதாரம் என்பது இந்திய மக்களின் ரத்தத்தில் கலந்துள்ளது என்றும், யாரோ வந்து நம் தேசத்தை சுத்தப்படுத்துவது தேவையில்லை என்றும் கூறியுள்ளார் மோடி.
தம் நாட்டை தாமே சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும் சக்தியும் சாமர்த்தியமும் பாரத தேச மக்களுக்கு உள்ளது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் பிரதமர் மோடி. தூய்மை இந்தியா குறித்து தேசப்பிதா மகாத்மா காந்தி செய்த தீவிர முயற்சிகள் பலனடைந்துள்ளன என்றார்.
இந்தப் பகுதி 108 நாடுகளில் ஒளிபரப்பாகப் போகிறது. அனைத்து நாட்டு மக்களும் புத்தம் புது மோடியைப் பார்க்கப் போகிறார்கள் என்று பேர் க்ரில்ஸ் கூறியுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு, காடுகளின் பாதுகாப்பு… இவற்றுக்காக நரேந்திர மோடி இந்த சாகச நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டார் என்று பாராட்டினார். இந்த எபிசோடு ஒளிபரப்பான பின் மக்களுக்கு சாகசப் பயணங்கள் மீது மேலும் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு நினைவுக்கு வரும் என்றும் விளக்கியுள்ளார்.
இயற்கையை வழிபடும் இயல்பு பாரத தேசத்து மக்களிடம் பிறப்பு முதலே காணப்படுகிறது என்று கூறினார். இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இயற்கையின் பங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.