நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவதன்? காரணம் என்ன? அதன் பலன் என்ன?
பதில்:அகண்ட தீபம் ஏற்றத்தான் வேண்டும் என்ற நியமமில்லை. ஏற்றுவதில் தவறு எதுவும் இல்லை. அப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது.
அகண்ட தீபம் ஒன்பது நாட்களும் கலசத்தோடு, அல்லது அடுக்கி வைக்கப்பட்ட கொலு மண்டபத்தோடு கூட இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது.
அகண்ட தீபம் ஏற்றும் போது அதனை ஒன்பது நாட்களும் கவனமாக ஒளிரும்படி காப்பாற்றி வர வேண்டும். அதற்கான நம்பிக்கையும் சூழலும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.
பொதுவாக தீபம் ஏற்றுவதன் முக்கிய உத்தேசம் தேவதைகளின் சக்தியை ஆவாகனம் செய்வதே. ஏனென்றால் தேவதைகள் ஒளி வடிவம் உடையவர்கள். பிரகாசமே வடிவமாகக் கொண்ட தேவதைகள் நம் இருப்பிடத்திற்கு வரவேண்டுமென்றால் பிரகாச வடிவான தீபம் ஏற்றப்பட வேண்டும்.
அதனால்தான் தெய்வ வழிபாட்டைத் தொடங்கும்போதும் தீபம் ஏற்றுகிறோம். நடுவிலும் தீபம் காண்பிக்கிறோம். இறுதியில் கற்பூர ஆரத்தி வடிவில் ஜோதியை சமர்ப்பிக்கிறோம்.
ஜோதி வடிவினரான தெய்வங்கள் அங்கு வந்து ஆசி வழங்கும் விதமாக பூஜை தடையின்றி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையோடு அகண்ட தீபம் ஏற்றும் வழிமுறை காணப்படுகிறது.
அதேபோல் நம் சங்கல்பம் விருத்தி அடைய வேண்டும்… அது முழுமை அடைய வேண்டும் என்ற கோரிக்கையோடும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.
அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும். முக்கியமாக ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கும்.
‘லோகைக தீபாங்குரா’ ஆகிய அம்பாளை ஜோதி வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறோம். அகண்ட தீபத்தில் ஜோதி வடிவத்தில் அம்மன் அசையாமல் நம் வீட்டில் வீற்றிருந்து நம் வழிபாட்டை ஏற்கிறாள்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்