நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: சைலபுத்ரி அம்மனுக்குப் பிரியமான நிவேதனம் என்ன? புஷ்பங்கள் என்ன?
‘சுவர்ண கவசாலங்க்ருத கனகதுர்கா…’ வடிவில் தரிசனம் அளிக்கும் சைலபுத்ரிகா அம்பிகைக்கு பிரியமான நெய்வேத்தியம் என்ன புஷ்பங்கள் என்ன?
பதில்: அம்மனுக்கு இந்த நெய்வேத்தியம் தான் பிரியம்… இந்த மலர்கள் தான் பிடிக்கும்… என்பதாக எங்கும் தீர்மானமாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம் என்று கூட எந்த சாஸ்திரத்திலும் இல்லை.
சிலச் சில கோவில்களில் எந்த வரிசைக் கிரமத்தை அனுசரிக்கிறார்களோ அதையே நாம் கடைபிடித்து வருகிறோம். அதைத்தவிர ஒன்பது நாட்களில் எந்தெந்த அலங்காரம்…? லட்சுமியாக ஒருநாள்… சுவர்ண கவச அலங்காரம் ஒருநாள்… இதெல்லாம் கூட அந்தந்த ஆலயங்களில் ஏற்படுத்தப்பட்ட சில நியமங்களே! அவற்றை கௌரவிக்க வேண்டும். ஆனால் அவையே நிச்சயமானவை என்று கூறுவதற்கில்லை.
ஆயின், இங்கு சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பார்க்கும்போது… முதல் நாளன்று வெண் பொங்கலும் பரமான்னம் என்று கூறப்படும் இனிப்பான பால் பொங்கலும் நெய்வேதியம் செய்வது சிறந்தது.
அடுத்து, அம்பிகைக்கு ஏற்ற புஷ்பங்கள் என்று பார்க்கையில்… நிறைய உள்ளன. சாமந்தி, சம்பங்கி புன்னாகம், ஜாதிமல்லி, கரவீரம்… பல ரகங்கள் உள்ளன.
அதேபோல் மருவம், துளசி, வில்வம் போன்ற இலைகளாலும் பூஜிக்கலாம். ஆனால் அருகம்புல்லால் துர்கா தேவியை பூஜிக்க கூடாது. சக்தி வழிபாட்டில் தூர்வா எனப்படும் அருகம்புல் மட்டும் நிஷேதம். இது தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
மென்மையாக, சுகந்தம் நிரம்பிய, சாத்வீகமான மலர்களை பூஜைக்கு உபயோகிக்க வேண்டும். காட்டமான நெடி கொண்ட பூக்கள், முள்ளுள்ள பூக்கள் போன்றவற்றை விலக்க வேண்டும். ஆனால் ரோஜா மலரை முள் இல்லாமல் பறித்து பூஜிக்கலாம்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக ஷர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்