7.கணபதியே வருவாய்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஆ ந: ஸ்ருண்வன் ஊதிபி: ஸீத சாதனம்
— ருக் வேதம்
“எம் வேண்டுதலைக் கேட்டு உன் சக்திகளோடு இந்த யக்ஞ சாலைக்கு வருவாயாக!”
வேத வேத்யனான பரமாத்மாவை வரவேற்று, சரணடையும் மந்திரம் இது.
“கணங்கள் அனைத்திற்கும் கணபதியாகவும், மந்திரங்களுக்கும் நற்செயல்களுக்கும் அதிபதியாகவும், கவிகளுக்குத் தலைவனாகவும், உத்தமர்களில் உயர்ந்தவனாகவும் விளங்கும் உன்னை வரவேற்று அழைக்கின்றேன்” என்ற வேத மந்திரத்தில் உள்ள வாக்கியம் இது.
“கணானாம் த்வா…” என்று தொடங்கும் இம்மந்திரம் நம் கலாச்சாரத்தில் யக்யம், அர்ச்சனை போன்ற அனைத்து செயல்களிலும் முதலில் பயன்படுத்தப்படும் சக்தி நிறைந்த சொற்கூட்டம்.
வசு, ருத்ரர்,ஆதித்யர் என்ற கணங்களாக விளங்கும் தேவதைகள் அனைவரையும் நியமிப்பவரான பரமேஸ்வரனை கணபதியாக குறிக்கிறது வேதம்.
கணபதியே யக்ஞங்களில் பயன்படுத்தும் மந்திரங்களுக்குத் தலைவர். அதனால்தான் ‘கவிகளின் பதி’ என்று குறிப்பிடப் படுகிறார். ‘கவி’ என்ற சொல் மந்திரங்களைக் குறிக்கிறது.
மந்திரங்கள் அனைத்திலும் பரமாத்மாவின் தத்துவமே சக்தியாக நிறைந்துள்ளது. யக்ஞம் முதலான கர்மாக்களைக் கூட நியமித்தவரும், அவற்றுக்குக் காரணமானவரும் கணபதியே!
யக்ஞ திரவியங்களே ‘உபமஸ்ரவங்கள்’. அதாவது உயர்ந்ததான அன்னம் முதலான ஐஸ்வர்யங்கள். அவற்றைச் சிறப்பாக பெற்றவன் பகவான். அனைவருக்கும் ஆதியாக, பெரியவனாக உள்ளவராதலால் சிரேஷ்டர். உயர்வாகக் காப்பவர், ஒளி பொருந்திய வடிவம் கொண்டவர். ஆதலால் “ஜ்யேஷ்டராஜா”.
யக்ஞங்கள் நடக்கும் இடத்தில் பரமேஸ்வரன் தன் சக்திகளோடு வந்துசேர்ந்தால் யக்ஞம் முழுமையாக தடையின்றி நடந்து பூரண பலனை அளிக்கும்.
இதில் சாதாரண பொருளையும் உட்பொருளையும் கவனித்தால் யக்ஞங்களின்படியும் தத்துவ ஞானத்தின்படியும் உயர்ந்த அர்த்தம் விளங்கும்.
யக்ஞத்தின் முக்கிய அங்கங்கள்:
1.தேவதை 2. மந்திரம் 3. திரவியம் 4. கிரியை.
இந்த நான்கின் ஒன்று கூடிய வடிவம் யக்ஞம். யக்ஞம் என்ற சொல்லுக்கு தியாகத்தோடு கூடிய நற்செயல் என்று பொருள்.
தேவர்கள் பலர் இருந்தாலும் அனைவரையும் நியமிப்பவராக
விளங்கும் ஈஸ்வரன் ஒருவனே! அதனால்தான் தேவதைகளுக்கும் (கணங்கள்), மந்திரங்களுக்கும் (உபஸ்ரவமங்கள்),
கிரியைகளுக்கும் (பிரஹ்மணங்கள்), தலைவனான ஆதிதேவன் (ஜ்யேஷ்டராஜா) – தன் சகல சக்திகளோடும் யக்ஞ சாலைக்கு வந்திருந்து அருள் புரிவது யக்ஞம் பரிபூரணம் அடைந்ததை அறிவிக்கிறது.
தத்துவத்தின்படி பார்த்தால், நம் உடலே யக்ஞ சாலை (சாதனம்). அதில் புலன்களின் இயல்புகளே தேவ கணங்கள். எண்ணங்களே கவிகள். செயல்களே ப்ரஹ்மணங்கள். யக்ஞத்திற்கு பயன்படுத்தும் திரவியங்களே (அன்னம் முதலான ஐஸ்வரியங்கள்) உபமஸ்ரவங்கள்.
இவை அனைத்தையும் நியமித்தவரான ஆதிமூலமான பரமாத்மாவே ஜ்யேஷ்டராஜா. அவருடைய சக்திகளே உடலின் புலன்களனைத்தையும் நடத்துவிக்கின்றன.
இந்த சக்திகள் அனைத்தும் கொண்ட பரமாத்மா நம் உடலில் இதய பாகத்தில் உள்ளார் என்ற ஆத்ம சொரூபத்தை அறியும் ஞானமே இந்த மந்திரத்தின் தத்துவப் பொருள்.
‘உபமஸ்ரவஸ்தமம்’ என்ற சொல்லுக்கு ஒப்பிடக்கூடிய உயர்ந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர் என்று மற்றுமொரு வேதப்பொருள் உள்ளது. அதாவது மிகப் புகழ்பெற்றவர் என்பது கருத்து.
இந்த மகா மந்திரம் ஜபத்திற்கு உகந்ததாகவும், மகா வாக்கியங்களின் பொருளாகவும் விளங்குகிறது.