இங்கிலாந்துக்கு எதிரான 4வது ‘டுவென்டி-20’ போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி கைகொடுக்க, 20 ஓவரில் 185 ரன்கள் குவித்த இந்திய அணி, 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் முடிவில் இந்திய அணி 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது.
இந்நிலையில் நான்காவது போட்டி, ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இஷான் கிஷான், யுவேந்திர சகால் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ராகுல் சகார் தேர்வு செய்யப் பட்டனர்.
இந்தப் போட்டியில்’டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (12), லோகேஷ் ராகுல் (14) இணை சுமாரான தொடக்கம் தந்தது. கேப்டன் விராட் கோலி (1) ஏமாற்றிய நிலையில், அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 57 ரன் எடுத்தார். ரிஷாப் பன்ட் (30), ஸ்ரேயாஸ் ஐயர் (37) நன்கு ஆடினர். ஹர்திக் பாண்ட்யா (11), வாஷிங்டன் சுந்தர் (5) சுமாராக ஆட, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன் கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 177 ரன் எடுத்து, வெற்றி இலக்கை கோட்டை விட்டது. இதை அடுத்து இரு அணிகளும் தலா இரண்டு ஆட்டங்களில் வென்று தொடர் சமனில் உள்ளது. எனவே கடைசி டி20 போட்டி பெரும் விறுவிறுப்பு நிறைந்ததாக, இறுதிப் போட்டி போல் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.