கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் ஒரு பத்திரிகையாளரை வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஓரிரு தொலைக் காட்சிகளில் இந்த செய்தி வெளியான போதிலும், இது குறித்து தமிழக ஊடகங்கள் அமைதி காப்பது வியப்பளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள எந்த கட்சியினரும் இந்த தாக்குதல் குறித்து கண்டனத்தை பதிவு செய்யாது இருப்பது, வன்முறை அரசியலை அனைத்து அரசியல் கட்சியினரும் நாடுவதை உணர்த்துகிறது.
ஹிந்து கோவில்கள் குறித்து திருமாவளவன் பேசியதை கண்டிக்க துப்பில்லாத, திராணியில்லாத, முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள், பிற்காலத்தில் இது போன்ற ஒரு நிலை தங்களுக்கும் வரும் என்பதை உணரவேண்டும். தமிழக காவல் துறை இது வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது, தமிழகம் வன்முறை காடாகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஊடகங்கள் இது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஊடக அறத்திற்கு உகந்தது அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அ தி மு க அரசு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? பயமா? அல்லது வாக்கு அரசியலா?
தொடர்ந்து ஒரு சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வன்முறை அரசியலில் ஈடுபடுவதை தடுக்க முடியாமல் காவல்துறை கண்கட்டி, வாய்மூடி இருப்பது ஏன்?
ஹிந்து மதம் குறித்தும், பிரதமர் குறித்தும், தேசம் குறித்தும் தரக்குறைவான விமர்சனங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மர்மம் என்ன? தமிழகம் பிரிவினைவாத, வன்முறை செயல்பாடுகளுக்கு துணை போவதை வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு?
வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாதியின் பெயராலோ, அரசியல் கட்சியின் பெயராலோ வன்முறையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மீது உள்ள பாசத்தினாலோ, அச்சத்தினாலோ ஊடகங்கள் இது குறித்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து.
– நாராயணன் திருப்பதி. (பாஜக)