சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து கீழே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு எடுத்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறீர்கள்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நஷ்ட ஈட்டை விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம். பேனர் விவகாரத்தில் விதிமீறல்களை கண்காணிக்காத அரசு ஊழியர்களை என்ன செய்யலாம்? என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து நிவாரணத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பேனரை தடுக்க தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருமணம், காதுகுத்து, கிடாவெட்டுதலுக்கு பேனர் வைப்பதை எப்படி தடுக்கப்போகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாநகராட்சியில் போதுமான ஆட்கள் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு சட்டவிரோத பேனர்களை கண்காணிக்க முடியாதா? என கேள்வி எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – பேனருக்கு தடை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர் வைக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று முத்தரசன் அறிவித்துள்ளார். பேனர் கலாச்சாரத்தால் வெளிநாடு செல்ல இருந்த தனது ஒரே மகளை இழந்துவிட்டதாக சுபஸ்ரீயின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுபஸ்ரீ தந்தையின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
பேனருக்கு பாமகவும் தடை
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பேனர்கள் வைக்க வேண்டாம் – டிடிவி தினகரன்
அமமுக கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் சாலை மையத்திலும் நடைபாதை ஓரத்திலும் பதாகைகள் வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நடக்காதபடி அனைவரும் பொறுப்போடும் சமூக அக்கறையோடும் செயல்பட டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக கொடிகள் அகற்றம்
இன்று உணவு திருவிழாவிற்கு சென்ற முதல்வரை வரவேற்க அதிமுக கொடிகள் கடற்கரை சாலையில் கட்டப்பட்டிருந்தன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.