போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அலங்கார வளைவுகளுக்குத் தடைவருமா?
உயிரோடு இருப்பவர்களுக்கு பொது இடங்களில் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் 2017.ல் உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரவை நடைமுறைபடுத்தவேண்டிய அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாததாலேயே இன்றைக்கு பேனர் விபத்தில் சுபஸ்ரீ மரண சம்பவம் நடைபெற்றது.
இப்போதாவது விழித்துகொண்டு அரசு பேனர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது நல்லது. அதுபோல் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அலங்கார வளைவுகள் வைப்பதையும் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தால் நல்லது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து பத்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் அலங்கார வளைவுகள் வைத்து கடும் போக்கு வரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி விழாவா? கோயில் விழாவா? கட்சி நிகழ்ச்சியா? எல்லாத்துக்கும் அலங்கார வளைவுகள் வைத்து தம்பட்டம் அடிக்கிறார்கள். மதம்,மொழி, இனம் என வேறுபாடு இன்றி அனைத்து கட்சியினரும், மதத்தினரும்,வர்த்தக நிறுவனத்தினர்களும் இவ்வாறு அலங்கார வளைவுகள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.
அலங்கார வளைவுகளை நிகழ்ச்சி நடக்கும் ஹாலின் முன்புறம் வைக்கலாம். அதை விட்டு விட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டின் குறுக்கே அலங்கார வளைவுகள் வைப்பவர்களை நினைக்கும் போது கோபம் கோபமாக வருகிறது. ஒரு புறம் கடைக்காரர்கள் ரோட்டையொட்டி நெருக்கமாக பொருட்களை குவித்து வைத்திருக்க.. இன்னொரு புறம் வாகனங்கள் செல்லவே முடியாதபடி அலங்கார வளைவுகள்… இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது.
- குமார்