தருமபுரி அருகே உள்ள அரூர் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி(25). இவருக்கும் அதே வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார்(26) என்பவருக்கும் இடையே அலுவலகத்தில் காதல் மலர்ந்தது.
இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அருண்குமார் ராஜேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அருண்குமாரின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு அரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண்குமார் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து ராஜேஸ்வரி தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நிலமையின் தீவிரத்தை உணர்ந்தனர். அதன் பின் இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்த, ராஜேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அருண்குமார் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து தர்மபுரி மகளிர் காவல் நிலையத்துக்கு எதிரே இருக்கும் விநாயகர் கோவிலில் தங்களது உறவினர்கள் முன்னிலையில் அருண்குமார் ராஜேஸ்வரிக்கு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மணமக்களை உறவினரும் காவல்துறை வாழ்த்தினர்.