திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலின் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை மன்னர் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தது. இந்தக் கோயிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
“திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என சுந்தரராஜன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011 இல் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், அனந்தபத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம் பெறுபவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும் என்று தீர்ப்பு அளித்தது.
இதை அடுத்து, மன்னர் குடும்பத்தினர் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். .
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, கேரளத்தில் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.