புது தில்லி:
காங்கிரஸ் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறது; மக்களிடம் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு திசை திருப்புகிறது என்று காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அதற்கு பதிலடியாக, மோடியின் உரையில் ஒன்றும் இல்லை; பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சொற்பொழிவுகளை அல்ல என்று கூறினார் சோனியா காந்தி.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பிரதமர் மோடி இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தினார். அப்போது, அவர், காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அப்போது பேசியவர், ‘’எங்களுக்கு ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை. காங்கிரஸின் தலைவர் தான் அவசர சட்ட நகலைக் கிழித்து பத்திரிகையாளர் முகத்தில் எறிந்தார். உங்களது தலைவர்தான், இளைய தலைவர்களின் கருத்துக்களை கேட்காமல் பிறர் குரல்வளையை நெரித்து வருகிறார். குடியரசுத் தலைவரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சியினருக்காக அவரது பேச்சை நிராகரிக்கக் கூடாது… என்று பேசினார் மோடி.
அவரது உரை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, ’ மோடியின் உரையில் ஒன்றும் இல்லை, பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல.’ என பதிலளித்தார்.