திமுக., பாணியில், எங்களுக்கும் தெரியும், ஆனால் இதைச் செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை சொல்ல, அப்படின்னா இதைச் செய்து காட்டுவோம் என்று பாஜக., தொண்டர்கள் செயல்பட, இணையத்தில் #கோ_பேக்_ஸ்டாலின் வைரலானது.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்துக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் போது, திமுக.,வினர் கோ_பேக்_மோடி என்ற ஹேஷ் டேக் போட்டு, வைரலாக்கினர். மோடி மீதான துர்பிரசாரத்தைக் கட்டமைத்து, மோடி தமிழகத்தின் விரோதி என்ற வகையில் மக்களிடம் பிரசாரம் செய்ய வைத்தனர். இதனை ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் திருமாவளவன் தெளிவாக, வெளிப்படையாக சொன்னார். மோடி வெறுப்பு என்பது நாமாகக் கட்டமைத்தது என்றார் திருமாவளவன்.
இப்போது காலம் மாறியிருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும், அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin கோபேக்ஸ்டாலின் என எங்களாலும் சொல்ல முடியும், ஆனால் சொல்ல மாட்டோம் என்று கூறினார் பாஜக., தமிழகத் தலைவர் அண்னாமலை. ஆனால் அவர் சொன்ன ஒரு மணிநேரத்துக்குள், தொண்டர்களோ எக்ஸ் தளத்தில் #கோ_பேக்_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை தெறிக்க விட்டனர்.
திருச்சியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது, திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2வது முனையத்தை ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்புள்ளது. இண்டியா கூட்டணி கூட்டத்தில், நிதீஷ் குமார் ஹிந்தியில் பேசியதை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் தி.மு.க., அரசு கண்ணாடியில் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகள் 2வது இடத்தில் இருந்த வளர்ச்சி, 3வது இடத்துக்கு சென்று விட்டது.
ஊழல் காரணமாக, பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி எவ்வளவு பின்னோக்கி செல்கிறது என்பதை, தி.மு.க., அரசு பார்க்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு, கண்டிப்பாக மத்திய அரசு உறுதியாக நிவாரணம் வழங்கி விடும்.
அதை மக்களுக்கு கொடுத்து விட்டோம், என்று தி.மு.க., சந்தோஷப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே, வளர்ச்சி பின்தங்கியிருந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக, 4 மாவட்டங்களில் உற்பத்தி திறன் மேலும் பின் தங்கிப் போகிறது. தூத்துக்குடியின் உற்பத்தி திறனை மீண்டும் கொண்டு வர இன்னும் 2 ஆண்டுகளாகும்.
ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, இன்னொரு புறம் உற்பத்தி திறனை இழந்து வருவதால், தமிழகத்தின் வளர்ச்சியை மேலும், 6 மாதங்களுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது.
தமிழக அரசு, மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாகவே, மழை வெள்ள பாதிப்பு பற்றி தெரிந்தவுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். தமிழகத்தில், வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடவும் வருகிறார். ஆனால், மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி, தி.மு.க.,வினர் வம்பு சண்டை செய்கின்றனர்.
மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரை, ‘கோ பேக் மோடி’ என்று தி.மு.க.,வின் தொழில் நுட்பப் பிரிவினர் பதிவு செய்வதை போல், தமிழகத்தில் முதல்வர் எங்கு சென்றாலும், கோ பேக் ஸ்டாலின் என்று கோஷம் போட முடியும். ஆனால், முதல்வர் என்ற பொறுப்புக்கு மரியாதை கொடுக்கிறோம்.. என்றார் அண்ணாமலை.
ஆனால், அவர் பேசிய அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் எக்ஸ் தளத்தில் GoBackStalin #கோபேக்_ஸ்டாலின் #GoBack_Stalin வைரலானது.
பெற்ற வரியை விட இருமடங்கு நிவாரணம் தமிழகத்துக்கு…
இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
பிரதமர் மோடி, எப்போதும் தமிழக மக்களின் நலன்களையே மனதில் கொண்டுள்ளார். இதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே எடுத்துக்காட்டு.
கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு அதை எதிர்கொள்ள தயாராகவில்லை. இதனால், மக்களின் கோபத்தை திசை திருப்ப, முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
‘யாஸ்’ புயலின் போது, ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதையும் குறிப்பிடவில்லை. இவை, பா.ஜ., ஆளும் மாநிலங்களா?
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், 101 மருத்துவக் கல்லுாரிகளின் ஒரு பகுதியாக, குஜராத் ஐந்து மருத்துவக் கல்லுாரிகளையும்; தமிழகம், 11 கல்லுாரிகளையும் பெற்று உள்ளது.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த ஒரு முறை மானியமாக, மத்திய அரசிடம் இருந்து தமிழகம், 868 கோடி ரூபாயும்; குஜராத், 304 கோடி ரூபாயும் பெற்றன. இவை, சில உதாரணங்கள் மட்டுமே.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 10.76 லட்சம் கோடி ரூபாயை அதிகார பகிர்வு, மானியங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களுக்காக வழங்கியுள்ளது.
இது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்றதை விட, மூன்று மடங்கு அதிகம்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகம் அளித்த வரி தொகையை விட, இரு மடங்கு அதிகம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.