பண்ருட்டி:
விஜயகாந்த் என்னை அடித்தது எனக்கு அவர் கொடுத்த ஆசீர்வாதம் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டு பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். பின்னர் பிரசார வேனில் ஏறினார். அவருடன் பண்ருட்டி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பி.சிவக்கொழுந்து நின்று இருந்தார்.
வேனை சுற்றி தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றனர். விஜயகாந்த் வேன் புறப்பட முடியவில்லை. ‘‘வழி விடுங்கள்’’ என விஜயகாந்த் சைகை காட்டியும் கூட்டத்தினர் நகரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் தனது அருகில் நின்று இருந்த சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வை பளார்.. பளார்… என 4 முறை அடித்தார்.
எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து அடியை வாங்கி குணிந்தவாறு நின்றார். அதோடு வேன் டிரைவரை காலால் உதைத்து ‘‘சீக்கிரம் போ’’ என கடிந்து கொண்டார். பொதுமக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை விஜயகாந்த் அடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிவக்கொழுந்து கூறியபோது, தமிழ்நாட்டில் விஜயகாந்த் மட்டுமே இயல்பான தலைவர். மக்களை பற்றி சிந்திப்பவர். மனதில் பட்டதை சொல்பவர். தவறு என்று நினைத்தால் அதை செய்தவர் யார் என்று பார்க்காமல் கண்டிப்பார். நிவாரண உதவி வழங்கிய இடத்தில் விஜயகாந்த் பிரசார வேன் முன்பு கட்சி தொண்டர்கள் முண்டியடித்து நின்றனர். இதனால் விஜயகாந்தால் மக்களை பார்க்க முடியவில்லை.
அந்த கோபத்தில் அருகில் இருந்த என்னை அழைத்து முதுகில் அறைந்தார். நான் குனிந்து கொண்டேன். மாவட்ட செயலாளரான நானே கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கண்டித்தார். அவர் சொன்ன பிறகே தவறை உணர்ந்தேன். முறையாக ஏற்பாடு செய்யாததால் அவர் தண்டனை கொடுத்தார். அவரிடம் அடி வாங்கியதற்காக வருத்தப்படவில்லை. தலைவர் கையால் அடி வாங்குவது அவர் ஆசிர்வதிப்பது மாதிரி தான். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவே இதை நினைக்கிறேன்…. என்று கூறினார்.