ஹைதராபாத்:
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா வர்த்தகப் பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது,
நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் பலர் சிலிண்டர் இணைப்புகளை வாங்கி வைத்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார். இந்த இணைப்புகளை ரத்து செய்வதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக சட்ட விரோத எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு வருமானம் பெறும் குடும்பத்துக்கு, அரசின் மானியத் தொகை எதற்கு? அந்த் தொகையை ஏழைகளுக்கு செல்விட அரசு முடிவு எடுத்துள்ளது. வசதியானவர்கள், அமைச்சர்கள் என சுமார் 30 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை இதுவரை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அவர் பேசினார்.


