பத்தனம்திட்ட: நவ.5 திங்களன்று சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுகிறது. இதை முன்னிட்டு, இன்று முதல் 6ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் இன்று இரவு முதல் ஆறாம் தேதி இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நிலக்கல் , பம்பை , இலவுங்கல் , சன்னிதானம் ஆகிய இடங்களில் தடை உத்தாவு அமல்படுத்தப்படும். சித்திரை ஆட்டத் திருநாள் விழாவுக்காக வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது 6ம் தேதி இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
இந்நிலையில், கடந்த மாதம் ஐப்பசி மாதப் பிறப்பு பூஜைகளுக்கு சபரிமலை நடை திறந்து 5 நாட்கள் பூஜைகள் நடைபெற்றன. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து முதல்முறை நடை திறக்கப்படுவதால், ஹிந்து மத நம்பிக்கை கொண்ட பெண்கள் இல்லாவிட்டாலும், யாரையாவது மலைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று அரசு தீவிரம் காட்டியது.
இதை அடுத்து பாஜக., ஆர்.எஸ்.எஸ்., சபரிமலை சேவா சமாஜத்தினர், ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் என அனைத்துத் தரப்பும் இணைந்து மலையில் ஓர் அரணாக நின்று சபரிமலை ஒழுக்கத்தைக் காத்து நின்றனர்.
இந்நிலையில் மீண்டும் தற்போது நடை திறக்கப்படும் நிலையில், சபரிமலையில் வன்முறைகளை நிகழ்த்த சுமார் 2000 கம்யூனிஸ தொண்டர்களுக்கு சிறப்பு பாதுகாவல் அந்தஸ்து கொடுத்து சபரிமலை, பம்பை, பத்தனம்திட்ட, நிலக்கல் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளது.