வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திங்கள் கிழமை அதிகாலை அந்நாட்டு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவும் அங்கே சோதனை மேற்கொண்டது.
வீடு ஒன்றினை சுற்றி வளைத்தபோது, பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதை அடுத்து, பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதனால் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதை அடுத்து, அந்தப் பகுதியில் வசித்த மக்களை அங்கிருந்து அப்புறப் படுத்திவிட்டு, பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாத பயங்கரவாதிகள், வேறு வழியின்றி, தாங்கள் வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இது குறித்து வங்கதேச சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது தெரிவித்த போது, எங்களது வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு சென்று பார்த்தனர். அதில், உயிரிழந்த இருவர் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் யாரென்பதை அடையாளம் காண்பது சிரமம். எனவே, டிஎன்ஏ பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவி, அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாம் உள்ளிட்ட நான்குபேரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்கள். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வங்கதேச படையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனைகளில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
திங்கள் இன்று கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பினரை தேடியது போலீச். வங்கதேசத்தில் 1998ல் தனி இஸ்லாமிய நாடு அமைப்பது என்ற முழக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வங்கதேச படையினரின் நடவடிக்கையால் அந்த அமைப்பின் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு, அந்த அமைப்பு வலுவிழக்கச் செய்யப் பட்டது.
இதை அடுத்து பெயரை மாற்றி, 2010ல் நியோ ஜமாத் உல் முஜாஹிதீன் என்ற துணை அமைப்பு தொடங்கப்பட்டது. இது அதே இஸ்லாமிக் ஸ்டேட் பங்ளாதேஷ் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. தொடர்ந்து, ஐஎஸ் அமைப்பின் கிளையாகவே செயல்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அந்நாடு, நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பு மற்றும் தொடர்புடைய பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை அடுத்து வங்கதேசமும் அதே போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது !
முன்னதாக, வங்கதேசத்தில், விரைவில் வருவோம் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பின் லோகோவுடன் போஸ்டர் இருந்ததை செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதை அடுத்து, வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.