குட்டைப் பாவாடை போடுவது என் உரிமை, என் கால்களைக் காட்டுவது என் உரிமை, நான் என்ன உடை போடுவது என்பதை நானே முடிவு செய்ய வேண்டும், அதை இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்று கூறும் வகையில், தான் குட்டைப்பாவாடை அணிந்து முழங்கால் காட்டிப் பதிவிட்ட போட்டோவுக்கு, சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்புக்கு பதிலடியாக மேலும் ஒரு குட்டைப் பாவாடை படத்தைப் பதிவிட்டிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
தான் நடிக்கும் ஹாலிவுட் படமான பே வாச் படத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜெர்மனி சென்றிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
அப்போது, ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை அங்கே சந்தித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. அப்போது அவர், குட்டைப் பாவாடை அணிந்து, முழங்கால் தெரிய அமர்ந்திருந்தார். இந்தப் படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பதிவில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாயிற்று. பிரதமர் முன் கால் மேல் கால் போட்டு, மரியாதை இன்றி அவர் அவமதித்ததாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவில் என்றால், பிரதமரைச் சந்திப்பதற்கு உடைக் கட்டுபாடு எல்லாம் உண்டு. ஆனால், வெளிநாட்டில் சந்தித்ததால், இதனை கவனக்குறைவாக பாதுகாப்பு அதிகாரிகள் விட்டதாகக் கூறப்பட்டது.
இருப்பினும் தன் மீதான விமர்சனங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, மேலும் ஒரு குட்டைப் பாவாடை படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டார் பிரியங்கா. அதில், தன்னுடன் தன் தாயாரும் முழங்கால் காட்டி இருப்பதைப் பதிவிட்டார். இதுவும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.