தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குமரிமுத்து நேற்று இரவு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
திரைப்பிரபலங்கள் பலர் இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சங்கம் குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தன்னுடைய நடிப்பாலும், மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்தார். அதற்காக மனம் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் அவருடைய உற்றார்க்கும், சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம்…
இந் த நேரத்தில் அவர் சங்கத்திற்கு ஆற்றிய அறும்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
நிறைவுசெய்யமுடியா ஒருவெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர்வளையமாகும். இப்படிக்கு அவர் பிரிவால் வருந்தியும், நினைவால் நெகிழ்ந்து வாடும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் அங்கத்தினர்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.


