தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியது: இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஆண்டு விழா நடத்த வேண்டும். மேலும், பள்ளி ஆண்டு விழாவின்போது, மாணவர்களுக்கு கலை தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கல்வியாளர்களை பங்குபெற செய்ய வேண்டும். ஆண்டு விழா நடத்துவதற்காக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ. 2,250, 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 2,450 என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இத்தொகையினை தொடர்புடைய ஒன்றிய கல்வி அலுவலகத்தில் உடனடியாகப் பெற்று, பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

