கொளுத்தும் வெயில் காலத்தில் என்ன செய்யலாம்?
இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துத் தான் தீர வேண்டும்.
கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
ஐந்து கிராம்பு மற்றும் 20 சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தும்.
சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.
முலாம்பழத்தை கோடைகாலத்தில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். முலாம்பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூஸாக்கி பருகினால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறலாம்.
வெயில் காலத்தில் நுங்கு அருமருந்தாகும். நுங்கை தோல் நீக்கி, பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வெயிலுக்கு பருகினால் இதமாக இருக்கும்.
சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி, சிறிது பாலும், தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து பருகினால், இரத்தம் விருத்தியாகும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் கோடைகாலத்தில் வராது.
தினமும் கோடைகாலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதோடு, உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.
புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகைப் பொருளாகும். மேலும் இது இரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. புதினாவில் உள்ள மென்தால் உடலை குளிர்ச்சியுடன் உணரவைக்கும்.
கோடையில் தினமும் தயிர் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்யும்.
நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கறுத்துப் போய் விடும். இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.