தன்னைச் சுற்றி பத்து பதினைந்து ‛அல்லக்கை’களை வைத்துக்கொண்டு, தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி ஸ்டன்ட் செய்து வந்த வாட்டாள் நாகராஜ் என்ற கர்நாடக உள்ளூர் தலைவர் அம்மாநில இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்று போனார்.
நோட்டாவிற்கு 986 ஓட்டுகள் கிடைக்க, நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானைப் போல கர்நாடகாவில், கன்னட மொழி குறித்து தீவிரமாக பேசி வருபவர் வாட்டாள் நாகராஜ்.
கன்னட வெறியரான இவர், கன்னட சலுவலி வாட்டாள் பக்சி என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடும்போது எல்லாம், தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அளவில் போராட்டத்தை நடத்துவார். ஆதரவாளர்களுடன் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பார்.
இந்நிலையில் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சிவாஜி நகர் தொகுதியில் வாட்டாள் நாகராஜ் போட்டியிட்டார்.
பா.ஜ., சார்பில் தமிழரான முன்னாள் கவுன்சிலர் சரவணா, காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத், மஜதவின் தன்வீர் அகமது ஆகியோர் போட்டியிட்டனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அடுத்த இடத்தில், சிறுபான்மையினர் உள்ளனர். தமிழர் ஓட்டுகளை குறிவைத்தே, சரவணாவுக்கு பா.ஜ., வாய்ப்பு அளித்தது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று (டிச.,9) எண்ணப்பட்டன. சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றார். அவருக்கு 49,980 ஓட்டுகள் கிடைத்தன. சரவணாவுக்கு 36,369 ஓட்டுகளும், தன்விர் அகமதுக்கு 1098 ஓட்டுகளும் கிடைத்தன.
ஆனால், தீவிர கன்னட ஆதரவாளராக காட்டிக் கொண்ட வாட்டாள் நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில், நோட்டா 986 ஓட்டுகள் பெற்று, வாட்டாள் நாகராஜை தோற்கடித்தது.
வாட்டாள் நாகராஜ் தோற்றதால் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.